சிங்கப்பூரில் இந்த ஆண்டின் நான்கு மாதங்களில் 27 வாந்தி, வயிற்றுப்போக்குச் சம்பவங்கள் பற்றி சிங்கப்பூர் உணவு முகவையும் சுகாதார அமைச்சும் புலன்விசாரணை நடத்தி உள்ளன.அச்சம்பவங்களில் 800க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அவற்றில் 13 சம்பவங்கள் பாலர்பள்ளி பிள்ளைகள் தொடர்பானவை. இதர நான்கு சம்பவங்களில் மற்ற கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று (மே 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2019ல் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 33 ஆக இருந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்தப் பாதிப்புகளுக்கான மூலக்காரணம் என்ன என்பதை அடையாளம் காண்பதும் எந்தெந்த சரியாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்வதும் அமைச்சும் முகவையும் கூட்டாக நடத்திய புலன்விசாரணைகளின் நோக்கமாக இருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.