அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், மயாமி நகரில் 12 மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நால்வர் மாண்டுவிட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது.
பலரை இன்னும் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரியவில்லை என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததற்காக காரணம் கேட்டு பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்தக் கட்டடத்தில் இந்திய வம்சாளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றும் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட 38 வயது பாவ்னா பட்டேல், அவரது கணவரான 42 வயது விஷால் பட்டேல், அவர்களது ஒரு வயது மகள் ஐஷாரி ஆகியோரைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாவ்னா கர்ப்பமாக இருப்பதாகவும் அவரது உறவினர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குடியிருப்பாளர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்று உறவினர்கள் குறைகூறினர்.