சிண்டா இளையர் மன்ற ஏற்பாட்டில் இனவாதம், மாதர்க்கு அதிகாரம் வழங்குதல், மனநலம் குறித்து ஆய்வு
இர்ஷாத் முஹம்மது
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், அக்கறைகள், சவால்களைப் பற்றி தீர ஆராய்ந்து, கலந்தாலோசித்து அதற்கான தீர்வுகளை வரையும் சமூகத் திட்டப் பணியில் 12 இளையர்கள் ஈடுபட்டனர். சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் பிரிவாக இயங்கும் சிண்டா இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் 15 வார திட்டமானது சிண்டா இளம் தலைவர்கள் திட்டம்.
இனவாதம், மாதர்க்கு அதிகாரம் வழங்குதல், மனநலம் ஆகிய மூன்று அம்சங்களை மூன்று இளையர் குழுக்களும் அலசி ஆராய்ந்தன.
திட்டத்தில் பங்குபெற்று வெற்றிகரமாகத் தேர்ச்சி அடைந்த 12 இளையர்களும் இம்மாதம் 3ஆம் தேதியன்று சிங்கப்பூர் கல்சா சங்க மண்டபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நோய்ப் பரவல் சூழலால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடந்த இந்த நேரடி நிகழ்வில் சிண்டாவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு தம்பிராஜா, பங்குபெற்ற இளையர்கள், அவர்களின் பெற்றோர், சிண்டா இளையர் மன்ற தொண்டூழியர்கள் என மொத்தம் 30 பேர் கலந்துகொண்டனர்.
மேலும் பலர் நேரலையாகவும் கலந்துகொண்டனர். சிண்டாவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா தமது வாழ்த்துச் செய்தியைக் காணொளிப் பதிவு மூலம் இளையர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அன்பரசு, இளையர்களின் துடிப்பான செயல்பாடு வரவேற்கத்தக்கது என்றும் இன்னும் நிறைய இளையர்கள் சமூக சேவையாற்ற முன்வரவேண்டும் என்றும் கூறி னார்.
"நீங்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய சக்தி படைத்தவர்கள். அதனால் உங்களுக்குப் பொறுப்புகள் உள்ளன. இளையர் சக்தி நமக்கு மேலும் தேவை," என்றார் அவர்.
எந்த சமூகமும் நிறைவான சமூகமாக இருக்கமுடியாது. இருப்பினும் முடிந்தவரை சிறந்த சமூகமாக இருக்கவே அனைவரும் முயற்சிக்கிறோம் என்ற கருத்தைப் பகிர்ந்த திரு அன்பரசு, கடந்த சில ஆண்டுகளாக இனவாதம், மன
நலம், குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகள் நம் சமூகத்தில் தலைதூக்குவதை நினைவூட்டினார்.
"அந்தப் பிரச்சினைகள் மேலும் மோசமாகாமல் எப்படி சமாளிப்பது என்பதைக் கண்டறிவது நமது பொறுப்பு," என்றார் அவர். பெற்றோரைக் கைவிட்டுவிடாதீர்கள் என்று ஆணித்தரமாக இளையர்
களுக்கு அறிவுறுத்தினார் திரு அன்பரசு.
"முதியோர் பலர் தனிமையில் தவிக்கின்றனர். அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று அவர் விளக்கினார்.
"ஒவ்வொருவருக்கும் சவால்கள் உள்ளன. எல்லோரும் வெவ்வேறு நிலைகளிலிருந்து தொடங்கு
கிறோம் என்பதையும் நாம் அறியவேண்டும். சோதனைகளை சாதனைகளாக்குவோம்," என்று இளையர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.
இளையர்களின் பகிர்வு
சிண்டா இளம் தலைவர்கள் திட்டத்தில் பங்குபெற்ற சில இளையர்கள், தங்கள் அனுபவத்தைப் பற்றி வருகையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
"மேடையில் உரையாற்றுவது என்றாலே முன்பெல்லாம் எனக்கு கால் நடுங்கும். ஆனால் தற்போது உங்கள் முன் நான் உறுதியுடன் பேசுகிறேன். இந்தத் திட்டத்தின் அணுகூலங்களில் இதுவும் ஒன்று," என்றார் ஸ்ரீ துர்காஷினி.
நிகழ்ச்சியில் மூன்று குழுக்களும் தங்களின் ஆய்வுகளை சுவரொட்டிகள், காணொளிகள் என வெவ்வேறு விதமாகப் படைத்தனர்.
மாதர்க்கு அதிகாரம் வழங்குதல் குறித்த படைப்பு பற்றி விளக்கிய குமாரி மதினா பீவி, தாம் கலப்புத் தற்காப்புக் கலையைக் கற்றுள்ளது உள்ளிட்ட சில சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்தார்.
இனவாதம் குறித்து விளக்கிய குழுவினர், வெளிப்படையாக தங்களின் அனுபவங்களை அனைவருடனும் பகிரும் தன்மை வேண்டும் என்றனர். சுவரொட்டி முழுதும் இனவாதக் கருத்துகளை அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.
பதற்றம் என்றால் என்ன, அதைக் களையும் வழிகள், உதவிக்கு எவரை அணுகலாம் போன்றவற்றை மனநலம் குறித்து ஆராய்ந்த குழு படைத்தது. மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தன்முனைப்பு வாசகங்களை எழுதி அனைவருக்கும் குழு வழங்கியது.
தலைமைத்துவம், குழுவாக ஒற்றுமையுடன் பணியாற்றுதல், புத்தாக்கச் சிந்தனை, மேம்பாட்டுத் திறன், இந்திய சிங்கப்பூரர் அடையாளத்தை ஆழமாகக் கண்டறிதல், தீர்வு காண்பது போன்ற திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிண்டா இளையர் மன்றம் 17 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களை அடையாளம் கண்டு, வருங்காலத் தலைவர்களை அரவணைத்துச் சமூகத்திற்கு அவர்கள் சேவையாற்ற ஊக்குவிக்க முனைகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தில் பங்கேற்பாளராக இருந்த தாஷினி சண்முகம், இவ்வாண்டு திட்டத்தை இணைத் தலைவராக வழிநடத்தினார். அவருடன் மிருதுலா குமாரும் இணைந்து செயல்பட்டார்.
சிண்டா இளையர் மன்றத் தலைவர் துர்கா ராஜேந்திரன், 29, இந்த ஆண்டுத் திட்டத்தின் ஆலோச
கராக இருந்தார்.
"தங்களையும் தாண்டிச் சமூகத்தின் தேவைகளில் உங்கள் நண்பர்களை அக்கறை கொள்ளச் செய்யுங்கள்," என்று அறிவுறுத்தினார் துர்கா.
"உங்கள் விருப்பப்படி எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு உள்ளது. அதைக் குறைத்து எடைபோட வேண்டாம்," என்று அவர் கூறினார்.