அங் மோ கியோ, கிளமெண்டி ஆகிய பகுதிகளில் உள்ள இரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விரு பகுதிகளிலும் கொவிட்-19 பரவலுக்கான சாத்தியம் குறித்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
புளோக் 456 அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 340 கிளமெண்டி அவென்யூ 5 ஆகிய புளோக்குகளில் வசிக்கும் அனைவரும் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். அந்த அங் மோ கியோ புளோக்கில் செயல்படும் கடைக்காரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சமூக அளவில் கிருமித்தொற்றைக் கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு இன்று (ஜூலை 24) தெரிவித்தது.
அந்த அங் மோ கியோ புளோக்கில் இதுவரை நான்கு குடும்பங்களில் எட்டுப் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
கிளமெண்டி புளோக்கில் நான்கு குடும்பங்களில் 12 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
அவ்விரு புளோக்குகளிலும் கிருமிப் பரவல் குறித்த விசாரணை தொடர்வதாக அமைச்சு கூறியது.