ஜப்பானில் சில மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி குப்பிகள் (vials) மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தக் குப்பிகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
எனினும், பாதிக்கப்பட்ட அந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதை அடுத்து இருவர் உயிரிழந்ததாக ஜப்பானிய சுகாதார அமைச்சு இன்று (ஆக்ஸ்ட் 28) தெரிவித்துள்ளது.
இரண்டாவது மொடர்னா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட ஒரு சில நாள்களில் 30களில் உள்ள அந்த இரு ஆடவர்கள் இறந்ததாக அமைச்சு கூறியது.
கடந்த வியாழக்கிழமையிலிருந்து மூன்று தொகுதி மொடர்னா குப்பிகள் பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை அந்த ஆடவர்கள் முன்னதாக போட்டுக்கொண்டனர்.
அவர்களது மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சில குப்பிகள் மாசுபட்டிருப்பதாக, ஜப்பானில் தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் உள்நாட்டு நிறுவனம் ஒன்றுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 863 தடுப்பூசி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 1.63 மில்லியன் மொடர்னா தடுப்பூசி அளவின் பயன்பாட்டை ஜப்பான் நிறுத்திவைத்துள்ளது.
தடுப்பூசியின் பாதுகாப்பு அல்லது ஆற்றல் தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் அடையாளம் காணப்படவில்லை என்று ஜப்பானிய அரசாங்கமும் மொடர்னா நிறுவனமும் தெரிவித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொடர்னா தடுப்பூசிகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அவை கூறின.
பாதிக்கப்பட்ட அந்தக் குப்பிகளில் உலோகத் துகள்கள் இருந்தன என நம்பப்படுவதாக ஜப்பானிய செய்தி நிறுவனமான என்எச்கே குறிப்பிட்டது.