ப. பாலசுப்பிரமணியம்
மேடைநாடகத் துறையில் நடிப்புக் கலைஞர், பின்னணியில் இயங்கும் வடிவமைப்பு, தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் என பல வேறுபட்ட பொறுப்புகள் உண்டு.
இவர்களுடன் ஒரு நாடகம் முழுமை அடைந்து உயிர்ப்புடன் மேடையேற்றப்படுவதற்கு, இன்னொருவரும் பங்களிக்கிறார். அவரை 'டிராமாட்டர்ஜிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். மிகவும் நுணுக்கமான அந்த வேலையில் திறன் பெற அடியெடுத்து வைக்கவுள்ளார் காளிதாஸ் சிந்தூரா, 32.
'டிராமாட்டர்ஜிஸ்ட்' எனும் நாடகத் துறை ஆய்வு நிபுணர்கள், ஒரு நாடகத்தின் எழுத்து, தயாரிப்புமுறை, சமூக வரலாற்றுப் பின்னணி, தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்து நாடக ஆசிரியருக்கும் குழுவுக்கும் ஆலோசனை வழங்குபவர்கள். அதாவது நாடகத்தின் எல்லா அம்சங்களை ஆய்வு செய்து நுட்பமாகத் தெரிந்துவைத்து நாடகத்தைச் செழுமைப்படுத்த உதவும் ஆலோசகர்கள் அவர்கள்.
இத்துறையில் நிபுணராக வேண்டும் என்ற இலக்கு கொண்ட குமாரி சிந்தூரா, இதன்பொருட்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற கோல்ட்ஸ்மித் கல்லூரியில் 'நாடகத் துறை ஆய்வு நிபுணத்துவம், அரங்ற்கேற்றுதலுக்கான எழுத்து' (Dramaturgy & Writing for Performance) எனும் துறையில் ஓராண்டுகால முதுகலைப் படிப்பை இவர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளார்.
இதற்காக, தேசிய கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளம் சிந்தூராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளத்தை இவ்வாண்டு பெற்ற எட்டு பேரில் இவரும் ஒருவர்.
"வளரும் பருவத்தில் நாடகம், பேலே நடனம், பியானோ என வெவ்வேறு கலைகளில் ஈடுபட்டு எனது ஆர்வத்தை வளர்த்து கொண்டபோது என் பெற்றோர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்," என்றார் சிந்தூரா.
ஹேக் பெண்கள் பள்ளியி லிருந்து ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வரையில் நாடக இணைப்பாடமே இவரது மூச்சாக இருந்தது.
மேல்நிலை தேர்வுக்கும் அரங்கக் கலை தொடர்பான பாடத்தையே இவர் பயின்றார். பிறகு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையுடன் கூடிய ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பை விரும்பி இவர் மேற்கொண்டார்.
தனியார் துணைப்பாட நிலையம் ஒன்றில் ஆங்கில ஆசிரியராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் குமாரி சிந்தூரா ஒருபோதும் அவரது பேரார்வத்தை விட்டு விலகவில்லை. நாடகமே இவரது உலகமாய் உள்ளது.
பல்கலைக்கழக நாட்கள் முதல் 'தி நெசசரி ஸ்டேஜ்', 'தி ஃபிங்கர் பிளேயர்ஸ்' என சில உள்ளூர் நாடக அமைப்புகளில் நடிப்பு, எழுத்து, ஒருங்கிணைப்பு, இயக்கம் என பல்வேறு பரிமாணங்களில் நாடகப் படைப்பின் பல்வேறு அம்சங்களை இவர் கற்று வருகிறார்.
சென்ற ஆண்டில் 'தி பிஃங்கர் பிளேயர்ஸ்' அமைப்பின் ஓராண்டு கால 'ஃபெலோஷிப்' திட்டத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொம்மலாட்டக் கலைப் படைப்பின் நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டார்.
நாடக ஈடுபாட்டுக்கு அப்பால், 'விமன் ஆஃப் சக்தி' எனும் தெற்காசியப் பணிப்பெண் நல்வாழ்வுக் குழுவில் தொண்டூழியராக ஆங்கிலம் சொல்லித் தருகிறார். கவிதைப் போட்டிகளிலும் பணிப்பெண்களை ஈடுபடுத்த உதவுகிறார்.
"உள்ளூர் ஆங்கில மேடை நாடகப் படைப்புகளில் இந்தியக் கலைஞர்களை அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை," என்று குறிப்பிட்டார் குமாரி சிந்தூரா.
எனினும் இந்த நிலை மாறி வருவதாகவும் நாடக நிறுவனங்களுடனும் சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து இக்கலைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் சொன்னார்.
"ஆங்கில மேடை நாடகங்களில் தெற்காசிய நாடகத் திறனாளர்களை ஈடுபடுத்தி, தெற்காசிய மரபு களையும் கதாப்பாத்திரங்களையும் யதார்த்தமாக மேடை நாடகங்களில் சித்திரிப்பது எனது நீண்ட நாள் ஆசை," என்று தெரிவித்தார் இளையர் சிந்தூரா.
இதன் தொடர்பில் கடந்தாண்டு ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரியான தமது 83 வயது தந்தை, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தை இவர் தமது கலைப் படைப்பின் வழி வெளிக்கொண்டு வந்தார்.
"சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகளின்போது ஒரு போலிஸ் அதிகாரியாக அவர் பணியாற்றியது சுவாரசியமான விஷயம். இதுபோன்று சமூகத்தில் நாம் அதிகம் அறியாத மற்றவர்களின் உண்மைக் கதைகளை வெளிக்கொண்டுவர கடப்பாடு கொண்டுள்ளேன்," என்றார் குமாரி சிந்தூரா.
"சிக்கலான விவகாரங்களைப் பற்றி இளையர்கள் ஆக்கபூர்வ மாகப் பேசுவதற்கு மேடை நாடகங் களால் நல்ல அடித்தளத்தை உருவாக்க முடியும்.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மனநலன், இனப்பாகுபாடு போன்ற விவகாரங் களைப் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாட ஆசிரியர்களுக்குக் கலைப் படைப்புகள் உதவும்" என்றார் கல்வியாளரான சிந்தூரா.
சிக்கலான விவகாரங்களை முழுமையாக தவிர்த்துவிடுவது ஏற்ற தீர்வாக இருக்காது; ஏனெனில் பெரியவர் ஆனதும் அவற்றை எதிர்ச்கொள்ளும்போது ஆக்க பூர்வமாகக் கையாளத் தெரிய வேண்டும் என்று சிந்தூரா விளக்கினார்.