ப. பாலசுப்பிரமணியம்
எங்கிருந்து தொடங்குகிறோம் என்பது முக்கியம் அல்ல. ஆனால் நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதே முக்கியம். இதை இளையர் சி.மகேந்திர பிரசாத் (படம்) தன் வாழ்க்கையில் அடைந்துள்ள முன்னேற்றம் மூலம் நாம் உணரலாம்.
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் மகேந்திர பிரசாத் பயிலும்போது பொதுக் கல்வி சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
அதன் பிறகு, பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைக் கல்வித் திட்டம் (Polytechnic Foundation Programme) வழி இவர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்னேறினார்.
அங்கு அவர் பொது ஊடக நிர்வாகத் துறை தொடர்பான பட்டயப் படிப்பை மேற்கொண்டார்.
கடந்த ஆண்டு பட்டயக்கல்வி சான்றிதழ் பெற்று தேசிய சேவையை செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கினார்.
அதையடுத்து, சீருடைப் படைகளில் சேர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இந்த ஆண்டு தோன்றியது. அதன்படி, சிங்கப்பூர் ஆயுதப்படை உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பித்தார்.
அவரது ஆசைப்படி உபகாரச் சம்பளத்திற்குத் தகுதிபெற்று, சிங்கப்பூர் ஆகாயப்படையில் சேவையாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
தேசிய சேவை புரியும்போது, பயிற்சி அதிகாரி பள்ளியில் (OCS) கிடைத்த அனுபவம் அவரைச் சீருடைப் படையில் சேரத் தூண்டியதாகக் கூறினார்.
"பள்ளிப் பருவத்திலிருந்தே பொதுச் சேவைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை ஆசிரியர்கள் என்னுள் விதைத்தனர்.
"தலைமைத்துவப் பண்புகளைப் பயிற்சி அதிகாரி பள்ளியில் வளர்த்துக்கொண்டதால் இன்னும் பெரிய அளவில் என்னால் பங்காற்ற முடியும் என்று நினைத்து சேவையில் சேர விண்ணப்பித்தேன்," என்று தெரிவித்தார் 22 வயது மகேந்திர பிரசாத்.
உபகாரச் சம்பளத்திற்குத் தகுதி பெறுவோர், பயிற்சி அதிகாரி பள்ளியில் தங்களின் பயிற்சி காலம் முடிந்த பிறகு அடுத்தாண்டு உள்ளூரில் அல்லது வெளிநாட்டில் அரசியல், பன்னாட்டு உறவுகள் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு மகேந்திர பிரசாத் அதை முடித்த பின், சிங்கப்பூர் ஆகாயப்படையில் ஆகாயப்படை தற்காப்புப் போர்க்கருவி அதிகாரி யாகச் சேவையாற்றுவார். அதிநவீன போர்க்கருவிச் சாதன செயல்முறைகளின் பயன்பாட்டில் வல்லமை பெற்ற இந்த அதிகாரிகள் சிங்கப்பூரின் ஆகாயவெளியை, எல்லை மிரட்டல்களிலிருந்து பாதுகாக்கின்றனர்.
ஆகாயப்படையின் கொள்கைகளை நிலைநாட்டி, வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்பச் செயல்படுவதுடன் தேசிய சேவை செய்யும் வீரர்களை வழிநடத்தும் பொறுப்பையும் கையாளத் தான் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார், மகேந்திர பிரசாத்.