கோ அஹேட் நிறுவனம் நாளை மறுதினத்திலிருந்து அதன் ஐந்து பேருந்துச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறது. கொவிட்-19 நெருக்கடிநிலையால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் பேருந்துச் சேவைகள் விரைவுச்சேவை அல்லது நேரடி நகரச் சேவையாகும்.
இந்தத் தகவலை அந்நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
12e, 43e, 518 ஆகிய விரைவுச்சேவைகளும் 661, 666 ஆகிய நகர நேரடிச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன.
கோ-அஹேட் நிறுவனத்தின் பேருந்து எண் 12, 43 ஆகிய பிரதான பேருந்துச் சேவைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூக அளவிலான கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை எதிர்கொள்ளும் வகையில் சில பேருந்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
குறைந்த அளவிலான பயணிகள் பயன்படுத்தும் பேருந்துச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி அவற்றின் ஓட்டுநர்களை அதிகப் பயணிகள் பயன்படுத்தும் பேருந்துச் சேவைகளுக்குப் பயன்படுத்த ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக கோ-அஹேட் பேருந்து நிறுவனம் கூறியது.