சாலைகளில் சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்ப்பதற்காக சில வாகனமோட்டிகள் எதுவேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கின்றனர்.
அத்தகைய வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அதிகாலையில் நிகழ்ந்தது. ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள யுங் ஷெங் சாலையில் சிவப்பு போக்குவரத்து விளக்கைத் தவிர்ப்பதற்காக வாகன ஓட்டுநர் ஒருவர் “குறுக்குவழி”யில் சென்றார்.
இதன்மூலம் சாலைச் சந்திப்பில் காரை நிறுத்தாமலேயே அந்த ஓட்டுநர் சென்றுவிட்டார்.
அந்த ஹோண்டா வாகனமோட்டியின் செயலைக் காட்டும் காணொளி ஒன்று SG Road Vigilante யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்த ஓட்டுநரின் செயல் “புத்தாக்கமானது” என்று இணையவாசிகள் கிண்டல் செய்யும் விதமாக வர்ணித்தாலும், இதுகுறித்து போக்குவரத்து போலிசிடம் புகார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.