ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கொண்டவர் 46 வயது திருமதி தைலம்மை காத்தியப்பா. தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவில் இனிப்பை முற்றிலும் தவிர்ப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்கு முதற்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதியானது.
வேலை காரணமாக 2018ஆம் ஆண்டில் தமது வழக்கமான பரிசோதனைக்கு அவரால் போக முடியவில்லை. ஈராண்டுக்குப் பிறகு புற்றுநோயால் தமது நெருங்கிய தோழி அவதிப்பட்டதைக் கண்டு, அதே மாதத்தில் பரிசோதனைக்குச் சென்றார். 'மெமோகிராம்' பரிசோதனைக்குப் பிறகு 'அல்ட்ராசவுண்ட்' பரிசோதனைக்குச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தினார்கள் மருத்துவர்கள்.
"அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின்போது அங்கு ஒரு திரை இருந்தது. எனது மார்பகத்தில் கட்டி போன்ற ஒன்று இருப்பதை நான் அந்தத் திரையில் பார்த்தேன். உடனே ஒரு மார்பகப் புற்றுநோய் நிபுணரைச் சந்திக்க எனக்குப் பரிந்துரைக்கப்பட்டது. எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை அந்த நிபுணர் உறுதிசெய்தார்.
"எனக்கு அது மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. மார்பகப் புற்றுநோய் எனக்கு இருப்பதாக அவர் கூறியபோது அதை என்னால் நம்பமுடியவில்லை. அந்தச் சந்திப்பில் அவர் கூறிய வேறு எதுவுமே என்னுள் பதியவில்லை. 'புற்றுநோய்' என்ற சொல் மட்டுமே என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது," என்றார் அவர்.
புற்றுநோயால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை நாமே அனுபவிப்பது என்பது முற்றிலும் வேதனைக்குரிய ஒன்று என்று கூறினார் திருமதி தைலம்மை.
உடலளவில், மனதளவில், குடும்ப ரீதியாக, வேலை ரீதியாக அவர் பல மாற்றங்களையும் பாதிப்புகளையும் சந்தித்தார்.
'கீமோதெரபி', 'ரேடியோதெரபி' சிகிச்சைகளுக்குச் சென்றபின் இவர் உடல் சோர்ந்து போய்விடும். தலைமுடி மட்டுமல்லாமல் நடை, பேச்சு, நினைவாற்றல், தோல் அனைத்திலும் அவருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை பார்த்த அவரால், சமையலறையிலிருந்து படுக்கை அறைக்கு நடந்து செல்வதுகூட சிரமமாகிவிட்டது.
கீமோ சிகிச்சைக்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் ஒருமுறை கணவர் சுப்பையாவிற்குத் தாம் சமைத்த உணவைப் பரிமாறினார். உணவைச் சாப்பிட்டுவிட்டு, "என்ன இதில் உப்பே இல்லை?" என்று கணவர் கூறியதற்குப் பதில் அளிக்க முடியாமல் திகைத்து நின்றதை நினைவுகூர்ந்தார் திருமதி தைலம்மை.
சிகிச்சையினால் தன்னால் ருசி பார்க்கவும் முடியாமல் போனதை உணர்ந்தார் அவர்.
ஓராண்டு காலம் தொடர்ந்து தேவையான சிகிச்சைகளுக்குச் சென்று இன்று புற்றுநோயிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார், இரு பிள்ளைகளுக்குத் தாயான இவர். இந்தப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தது தமக்கு நன்மையில் முடிந்தது என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
மருத்துவப் பரிசோதனைகள், குறிப்பாக மெமோகிராம் பரிசோதனையைப் பல ஆண்டுகளாக செய்துகொள்ளாமல் சிலர் இருக்கின்றனர் என்ற செய்தி இவருக்கு அதிர்ச்சி தருகிறது.
"நம் உடலில் ஏற்படும் மாற்றம், கண்களுக்குப் புலப்படாது. யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். மெமோகிராம் பரிசோதனை மூலம் ஆரம்பக் கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பதை உடனே உறுதிசெய்யும். அதற்கான சிகிச்சையை நாடி நம்மால் நம் உயிரைக் காத்துக்கொள்ளலாம்," என்றார் தைலம்மை.
நோயிலிருந்து இவர் மீண்டுவரும் பயணத்தில் உளவியலாளர், தொழில்முறை சிகிச்சையாளர், பாலியல் நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.