பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவிப்பு
கரிம வெளியீடு அதிகரிப்பதைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூர் தண்ணீர் சுத்திரிப்பு ஆலைகளில் கரிம உமிழ்வு அல்லது வெளியீட்டை முற்றிலும் குறைப்பதற்கு பொதுப் பயனீட்டுக்கழக சிங்கப்பூர் தண்ணீர் முகவை $6.5 மில்லியன் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
'கார்பன் ஸீரோ கிராண்ட் சேலஞ்ச்' என்னும் இந்தத் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்படும் கரிம வெளியீட்டைக் குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, சரியான தீர்வு காண்பவர்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்படும்.
இதில் தண்ணீர் சார்ந்த துறையில் உள்ள புத்தாக்கத் திறனாளர் மட்டும் அல்லது உலகெங்கிலும் உள்ள மற்ற துறைகளைச் சார்ந்த புத்தாக்கத் திறனாளர்களும் கலந்துகொண்டு தண்ணீர்த் துறையில் உருவாகும் கரிம வெளியீட்டை முற்றிலும் குறைக்க தீர்வுகாணலாம்.
கரிமப் படிவுகளைக் கண்டறிவது, பயன்படுத்துவது, சேமிப்பது, நீக்குவது போன்றவற்றுக்கான தீர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை அடியோடு அகற்ற வேண்டும் என்று பொதுப்பயனீட்டுக் கழகம் இலக்கு கொண்டுள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்கு ஏற்ப புத்தாக்கத் திறனாளர்களின் தீர்வுகளை அது எதிர்பார்க்கிறது. இந்தத் தீர்வுகள் எந்தவொரு தொழில்நுட்ப நிலையையும் கொண்டிருக்கலாம். ஆனால் பொதுப்பயனீட்டுக் கழகச் செயல்முறைகளுடன் இணைந்து, பத்தாண்டுகளுக்குள் அல்லது அதற்கு முன்னர், கரிம வெளியீட்டை முற்றிலும் ஒழிக்கும் புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் அனைவரையும் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கான முன்மொழிவுகளை இப்போது முதல் 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
"இது ஒரு திறந்தவெளி புத்தாக்க சவாலாக இருந்தாலும் சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் நிறுவனங்களும் கலந்துகொள்ளலாம்," என்று பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நிலைமைத்தன்மைக்கான தலைமை அதிகாரி குமாரி சோங் மியென் லிங் கூறினார்.
கரிம வெளியீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு கழகம் மும்முனை உத்திகளைக் கையாண்டு வருகிறது. அவை, கரிம வெளியீட்டை அதிகரிக்கும் சாதனங்களை மாற்றுவது, அதன் பயன்பாட்டைக் குறைப்பது, அல்லது அவற்றை நீக்குவது ஆகியவை ஆகும்.
அதன்படி பெரும்பாலான கட்டடக் கூரைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை கரிமம் வெளியிடக்கூடிய வகையைச் சார்ந்த எரிசக்திக்கு மாற்றாக சூரிய ஒளி மூலம் எரிசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
எரிசக்தி, ரசாயனத் துறைகளிலும் கரிம வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்கும் வகையில் அதன் செயல்பாடுகளில் புத்தாக்க மாற்றங்களை சிங்கப்பூர் ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்று அனைத்துத் துறைகளிலும் கரிம வெளியீடற்ற எரிசக்திச் சாதனங்களைப் பயன்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.