கோலாலம்பூர்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கென பிரத்தியேக விமானப் பயணத்தடம் மூலமாக எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் ஆலோசனை நடத்தும் என்று மலேசிய சுற்றுலா, கலைகள், கலாசாரத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சரை நாளை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசவிருப்பதாக அவர் கூறினார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக, வரும் டிசம்பர் மாதவாக்கில் தனது எல்லைகளை மீண்டும் திறந்துவிடுவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருகிறது.
இப்போதைக்கு, முன்னோடிப் பயணப் பாதுகாப்பு வளையத் திட்டம் ஒன்றின் மூலமாக, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் நவம்பர் 15ஆம் தேதி முதல் லங்காவிக்கு வந்துசெல்லலாம் என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.
ஆயினும், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதலுக்கு அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று திருவாட்டி நான்சி கூறினார்.