மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கை தாம் நேரில் சந்தித்து அதுகுறித்து பேசியதாகக் கூறினார்.
ஜப்பானில் நடைபெறும் உலகச் சுகாதார நிறுவனச் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக, சிங்கப்பூர் வழியாக ஜப்பான் செல்லவிருந்தபோது, சாங்கி விமான நிலையத்தில் திரு ஓங்கை தாம் சந்தித்ததாக திரு கைரி சொன்னார்.
“இரு நாடுகளுக்கும் இடையே திறந்த, சௌகரியமான பயண ஏற்பாடுகளை இறுதிப்படுத்த, இருதரப்பும் பணியாற்றி வருகின்றன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம் என நாங்கள் நம்புகிறோம்,” என்று திரு கைரி பதிவிட்டார்.