சிங்கப்பூரின் ஜூரோங் தீவு எண்ணெய் நடுவம், ஆற்றல் மற்றும் ரசாயனப் பூங்காவாக மாற்றப்படும். அது நீடித்து இயங்கும்.
அதன் நிலையான தயாரிப்புகளை உலக அளவில் ஏற்றுமதி செய்யும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை, 2019ஆம் ஆண்டிலிருந்து நான்கு மடங்கு நிலையான பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், 2050ஆம் ஆண்டளவில் குறைந்த கரிம கரைசல்களில் இருந்து ஆண்டுக்கு ஆறு மில்லியன் டன்னுக்கு மேல் கரிமக் குறைப்பை அடைவதையும் இந்தத் திட்டம் கருதுகிறது.
புக்கோம் தீவில் உள்ள ஒரு ஷெல் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் திரு கான், 'நிலையான ஜூரோங் தீவு' திட்டத்தை அறிவித்தார்.
இது கடினமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய பெட்ரோலிய ரசாயனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யாக மாற்றும்.
பைரோலிசிஸ் எண்ணெய் மேம்பாட்டு ஆலை, நெதர்லாந்தின் இந்தப் பெரிய எண்ணெய் நிறுவனத்துக்கு உலகளவில் முதல் ஆலையாக இருக்கும். இது 2023ல் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
இது ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆலையாகவும் ஆண்டுக்கு 50,000 டன் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும் இது சுமார் 7.8 பில்லியன் பிளாஸ்டிக் பைகளின் எடைக்குச் சமம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எரிசக்தி, ரசாயனத் துறையை நிலைத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான அரசாங்கத் திட்டங்களின் ஒரு பகுதிதான் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய ஜூரோங் தீவுத் திட்டம் என்று சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன் பசுமைப் பொருளாதாரத் தின் ஆதார தூண்களாக முதலில் அறிவிக்கப்பட்ட ஜூரோங் தீவின் நிலைத்தன்மை இலக்கைக் கொண்டுள்ள முதல் திட்டம், ஷெல் ஆலை ஆகும்.
நீண்ட கால இலக்குகளை அடையும் வகையில், 2030க்குள் எரிசக்தி, ரசாயனத் துறையை அடைய சில இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஜூரோங் தீவை மாற்றியமைத்து இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் தொழில்துறைக்கு ஆதரவளிக்க, அரசாங்கம் பல உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல சிங்கப்பூரர்கள் உட்பட 27,000க்கும் அதிகமானோர் பணிபுரியும் எரிசக்தி, ரசாயனத் துறை யானது, குறைந்த கரிம எரிபொருள், புதுப்பிக்கத்தக்க பொருட்கள் மற்றும் நிலையான ரசாயனங்கள் ஆகியவற்றின் மாற்றத்தை எதிர் கொண்டு வருவதாகவும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய ஜூரோங் தீவு திட்டம் இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றும் திரு கான் கூறினார்.