சிங்கப்பூரரான லோ கியன் இயூ, பூப்பந்து (பேட்மிண்டன்) உலகில் சிங்கப்பூர் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
'உலக பூப்பந்து கூட்டமைப்பின் உலக வெற்றிவீரர்' என்ற அவருடைய இந்த தங்கப் பதக்கச் சாதனை, பொதுவாக காற்பந்து பிரியர்களான சிங்கப்பூர் ரசிகர்களில் பலரையும் பூப்பந்து விளை யாட்டு பக்கம் திருப்பி இருக்கிறது.
உலக பூப்பந்து வெற்றி வீரர்கள் தரவரிசையில் 22வது இடத்தைப் பிடித்து இருந்த அவர், 14வது இடத்தில் இருந்த இந்தியாவின் 29 வயது கிடாம்பி ஸ்ரீகாந்தை, 21-15, 22-20 எனும் செட் கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் வெறும் 43 நிமிடங்கள், 2 ஆட்டங்கள், 78 புள்ளிகளுடன் அவர் பூப்பந்து விளையாட்டு உலகையே பிரமிக்கவைத்தார்.
இந்த 24 வயது இளைஞர்தான் உலக பூப்பந்து வெற்றிவீரராக மகுடம் சூடி இருக்கும் முதல் சிங்கப்பூரர். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) நடந்த காலிறுதிப் போட்டியில் லோவின் வலது கணுக்காலில் அடிப்பட்டது.
அரையிறுதி ஆட்டம் சனிக் கிழமை நடந்தது. அதில் கலந்து கொண்ட லோ சக்கரநாற்காலியில் செல்ல வேண்டியிருந்தது.
காலில் காயம் இருந்தபோதும் நேற்றைய இறுதிச்சுற்றில் லோ நிதானத்துடனும் துணிவுடனும் விளையாடி சாதனை படைத்தார்.
"கணுக்காலில் வலி தாங்க முடியவில்லை. நடக்கக்கூட முடியவில்லை. இருந்தாலும் திட்டவட்டமான உறுதியுடன் இருந்தேன்.
"வலியை எல்லாம் தாங்கிக் கொண்டேன். கணுக்காலில் சில சிகிச்சைகளையும் எடுத்துக்கொண்டேன். போட்டி முடிவு பெரு மகிழ்ச்சி தந்தது" என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் திரு லோ தெரிவித்தார்.
"எனது கனவு இப்போது நனவாகி இருக்கிறது. இருந்தாலும் எனது இலக்கு நிறைவேற நான் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.
"சிங்கப்பூருக்கு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தரவேண்டும் என்ற எனது கனவு நிறைவேற தொடர்ந்து பாடுபடுவேன்," என்று திரு லோ கூறி உள்ளார்.
இலக்கு, உறுதி, விடாமுயற்சியுடன் திரு லோ ஒலிம்பிக் சாதனையையும் நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இப்போது அவர் பெற்று உள்ள வெற்றி மூலம் வலுவடைந்து உள்ளது.