கண்கள், கடவுள் நமக்கு அளித்த ஒரு விலைமதிப்பற்ற பரிசு. இதன் மூலம்தான் உலகின் அழகை நம்மால் ரசிக்க முடிகிறது. இருப்பினும், இன்றைய சூழலில், கணினி, கைபேசிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதால், நமது கண்களின் ஆரோக்கியத்தை இந்த 'டிஜிட்டல்' ஒளித் திரைகள் வெகுவாகப் பாதிக்கின்றன என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
கிட்டப் பார்வை (Myopia), தூரப் பார்வை (Hyperopia), சமச்சீரற்ற பார்வை (Astigmatism), வெள்ளெழுத்து (Presbyopia) என இந்தப் பார்வைக் குறைபாடுகள் விதவிதமான பெயர்களில் வரையறுக்கப்படுகின்றன.
எந்த வயதிலும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, சமச்சீரற்ற பார்வை ஏற்படலாம். 40 வயதைக் கடந்த வர்களுக்கு வெள்ளெழுத்து குறைபாடு தோன்றும்.
இந்த அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இயற்கை முறையில் தீர்வு காண முடியும் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த தலைமை கண் மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி.
இதற்கான உணவுமுறைகள், வாழ்க்கைமுறைகள், கண் பயிற்சிகளை முறையாகப் பின்பற்றி வந்தால் அனைத்துக் கண் குறைபாடுகளையும் நீக்கமுடியும் என்கிறார் இவர்.
கண் நோய்கள் குணமாக இயற்கை வழிமுறைகள்:
கட்டாயமாக காலையில் இயற்கை உணவும் மதியம் ஒருவேளை மட்டும் சமைத்த உணவையும் சாப்பிட்டு வரவேண்டும். பழங்கள், விதைகள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவுகளைச் சமைக்கக் கூடாது.
பப்பாளிப்பழம், மாம்பழம், கேரட், பொன்னாங்கண்ணி கீரை, மற்ற கீரைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சுப் பழம் ஆகியவையும் நல்லது.
கண் பார்வை தெளிவாகப் பெரிதும் உதவக்கூடியது பப்பாளியும் மாம்பழமும்தான்.
வாரத்தில் ஒருநாள், மஞ்சள் பூ கரிசலாங்கண்ணிக் கீரை, நாட்டு நெல்லிக்காய் சாறு, ஆவாரம்பூ, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிடவேண்டும்.
எலுமிச்சம் சாறு தேனுடன் சேர்த்து 21 நாட்கள் குடித்துவர கண் நோய்கள் தீரும். ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சம்பழம் பயன்படுத்தலாம்.
கண் பார்வை குறைவு நீங்க ஒருநாள் கேரட் சாறு, மறுநாள் கறிவேப்பிலை-நெல்லிச் சாறு என நாள்தோறும் அருந்தவேண்டும். இவற்றை மாற்றி மாற்றி அருந்தலாம். சுவை தேவைப்பட்டால் மட்டுமே, தேங்காய்ப்பால், தேன் அல்லது நாட்டு வெல்லம் சேர்த்துப் பருகலாம்.
பசித்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்துக்கு வரவேண்டும். இரவு 8 மணிக்கு மேல் சமைத்த உணவுகளைத் தவிர்க்கவும். பசித்தால் பழங்களைச் சாப்பிடவும்.
இந்த உணவு முறை, கண் பயிற்சிகள், கண் கழுவும் முறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்து வர விரைவில் கண்ணாடியைக் கழற்றி வைக்கும் வகையில் கண் பார்வை தெளிவாகிக்கொண்டே வரும் என்று கூறுகின்றனர் கண் பராமரிப்பு நிபுணர்கள்.
சிமிட்டி கழுவுவது முக்கியம்
இதுபோல் கண் கழுவும் முறையும் சிறந்த பலனைத் தந்து, கண்ணாடியை கழற்றி வைக்கப் பெரிதும் உதவும். உள்ளங்கையில் தண்ணீரை நிரப்பி அதில் கண்களை வைத்து 15 முதல் 20 முறை வரை சிமிட்டலாம். இது எளிமையான பயிற்சி. ஆனால், விரைவில் நல்ல பலன் தரக்கூடிய முக்கியமான பயிற்சி. இரு கண்களையும் காலை, மாலை இருவேளையும் கழுவி வருவதால் கண்கள் குளிர்ச்சி அைடந்து பார்வை சீராகும்.
இந்தப் பயிற்சியைத் தினமும் செய்து வந்தால் ஆயுள் முழுவதும் கண் பார்வை குன்றாது. ஒருவேளை பார்வை குன்றியிருந்தால் சீராகலாம் என நம்பப்படுகிறது.
கண்கள் குளிர்ச்சி பெற
கண் கழுவும் முறையைச் செய்ய முடியாதவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். பொதுவாகக் கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருத்தல் நல்லது. படுத்திருந்த நிலையில் ஈரப்பஞ்சு அல்லது ஈர பருத்தித் துணியை இரு கண்கள் மீதும் நாள்தோறும் காலையும் இரவும் 15-20 நிமிடங்கள் வரை வைக்கலாம். வெள்ளரி சாற்றை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்க கண் எரிச்சல் நீங்கும்.
செய்தி/ படங்கள்:
இந்திய, தமிழக ஊடகம்