மாதங்கி இளங்கோவன்
சமோசா வியாபாரம் செய்யும் தாயும் மகளும் தங்களைப் போலவே வெவ்வேறு விதங்களில் சமூகத்திற்கும் குடும்பத்தாருக்கும் சேவை செய்யும் பெண்களை, அனைத்துலக மகளிர் தினத்தன்று கொண்டாட விரும்பினார்கள்.
அனைத்துலக மகளிர் தினமான இம்மாதம் 8ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 4 மணி முதல் மாலை ஆறு மணிவரை முப்பதுக்கும் மேலான பெண்களுக்கு இலவச தேநீர் வழங்கி உபசரித்தார்கள்.
குமாரி நஜிரா ரொஸ்னியும் திருமதி நூருல் அயினியும் 'ஹவுஸ் ஆஃப் சமோசாஸ்' வியாபாரத்தை சிறிய அளவில் கடந்த 2015ஆம் ஆண்டில் வீட்டில் இருந்தபடி தொடங்கினார்கள்.
வாடிக்கையாளர்கள் பெருகவே செயின்ட் ஜார்ஜஸ் சாலையில் கடை திறந்தார்கள்.
அதன்பின்னர், தற்போது மெக்பர்சன் சாலையில் செயல்படும் நவீன 'கஃபே'யைத் தொடங்கினர்.
பல சவால்களைச் சந்தித்திருந்தாலும் கொவிட்-19 கிருமித்தொற்றினால் தங்களுடைய வியாபாரம் பெருமளவில் சரிந்துபோய்விட வில்லை எனச் சொன்னார் நஜிரா.
கடையின் இணையப்பக்கம், விநியோகச் செயலிகளின் வாயிலாக மக்கள் தங்களுக்கு விருப்பமான, புதுமையான சமோசாக்களை தொடர்ந்து வாங்க முடிவதால் நூருல் அயினியின் வியாபாரம் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
"எங்கள் குடும்பத்தில் மூன்று பெண்கள் உள்ளனர். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருந்து, உத்வேகத்தோடு உழைத்தோம்.
"இந்திய நொறுக்குத் தீனிகளை அனைவருக்கும் சுலபமாக கொண்டு சேர்ப்பது எங்களது வியாபாரத்தின் முக்கிய நோக்கம்," என்றார் நஜிரா.
ெபண்களுக்காக நிதி திரட்ட புது முயற்சி
பெண்களைக் கொண்டாடுவதோடு அவர்களுக்கு உதவும் வண்ணம் நிதி திரட்டவும் 'காக்ெடய்ல்ஸ் ஃபார் அ காஸ்' எனும் திட்டத்தில் ஈடுபட்டார் குமாரி ஆர்த்தி சங்கர்.
ஹாலண்ட் வில்லேஜில் அமைந்துள்ள 'சிமிசாங்கா' (Chimichanga) என்ற மெக்சிக உணவகம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் புகழ்பெற்ற பெண்களை வரவழைத்து 'யுனைெடட் வுமன் சிங்கப்பூர்' என்ற மகளிர் அமைப்புக்கு நிதி திரட்ட உதவுகிறது 'சிமிசாங்கா'.
இவ்வாண்டு தனிப்பட்ட தொழில்களில் சிறந்து விளங்கும் நான்கு பெண்களுக்கு நான்கு வித 'காக்டெய்ல்' பானங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தனர் சிமிசாங்காவின் பணியாளர்கள்.
இப்பானங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியில் பாதித் தொகை 'யுனைெடட் வுமன் சிங்கப்பூர்' அமைப்புக்கு தரப்படும்.
"மக்கள் கழகத்தில் 10 ஆண்டு காலம் வேலை செய்திருந்தாலும் என்னால் தலைமைத்துவப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற தயக்கம் முதலில் இருந்தது. ஆனால், என்னைப் போன்ற பெண்கள் தொழிலிலும் திறமையிலும் நம்பிக்கை வைக்காவிட்டால் மற்றவர்களும் நம்முடைய திறமைகளில் ஐயம் கொள்வர்," என்று கூறினார் விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரியும் ஆர்த்தி.
"பெண்கள் ஒரு தலைமைத்துவப் பதவியில் இருக்கும்போது அவர்கள் அதிகாரம் நிறைந்தவர்களாகவும் மற்ற ஊழியர்களிடம் பணிவன்பாக உரையாடமாட்டார்கள் என்றும் பலரும் தப்புக்கணக்குப் போடுகிறார்கள்.
"அந்தத் தவறான எண்ணத்தை அகற்றும் வகையில், பெண்கள் முக்கிய பதவிகளில் பணியாற்றும்போது அவர்களுக்குத் தேவையான ஊக்கமளித்தால்தான் அவர்களும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை வரும்," எனக் கூறினார் ஆர்த்தி.
"பயப்படாமல், வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யவேண்டும்," எனவும் அவர் கூறினார்.
இம்மாதம் முழுவதுமாக 'டிக்கி டு யு லவ் மி' என்ற 'காக்டெய்ல்' பானத்தை சிமிசாங்காவில் வாங்கும்போது அதில் கிடைக்கும் பாதி வருமானம் யுனைட்டெட் மகளிர் அமைப்புக்குக் கொடுக்கப்படும் என்று 'சிமிசாங்கா' கூறியுள்ளது.
இந்திய நொறுக்குத் தீனிகளை அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்ப்பதே எங்களது வியாபாரத்தின் முக்கிய நோக்கம்.
நவீன கஃபே நடத்தி வரும் குமாரி நஜிரா ரொஸ்னி