மாதங்கி இளங்கோவன்
இளம் வயதிலேயே தாய்மொழிக் கற்றலை வாழ்நாள் பயணமாக ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூரின் அனைத்து உயர்நிலைப்பள்ளித் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் இனி தமிழ் முரசின் மின்-நாளிதழ் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரின் அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் முரசு, லியன்ஹ சாவ்பாவ், பெரித்தா ஹரியான் ஆகிய நாளிதழ்களின் மின் வடிவம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். 'உங்கள் விரல்நுனியில் செய்திகள்' திட்டம் மூலம் 136 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 143,000 மாணவர்கள் பயனடைவர்.
அகமது இப்ராஹிம் உயர்நிலைப்பள்ளியில் கல்வி அமைச்சு, நீ ஆன் கொங்ஸி, எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி) ஆகியவை, தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கும் முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் நேற்று கையெழுத்திட்டன.
ஒப்பந்தப்படி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நீ ஆன் கொங்ஸி மொத்தம் 15 மில்லியன் வெள்ளியை இத்திட்டத்திற்கு நன்கொடையாக அளிக்கும்.
"தமிழ் முரசின் மூலம் மாணவர்கள் அதிகம் அறிந்திராத சுற்றுச்சூழல் பிரச்சினைகள், நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது," என்று தமிழ் முரசு இதழின் தனித்துவமான தகவல்களை உதராணம் காட்டிப் பேசினார் நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் திரு சான் சுன் சிங்.
ஆங்கில மொழிக்கும் தமிழ்மொழிக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளித்து அவற்றைப் பயன்படுத்துவது சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்தைக் கட்டிக்காக்க முக்கியப் பங்களிப்பதாக திரு சான் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்க மட்டும் தாய்மொழியைப் படிக்காமல் உலக விவகாரங்களைப் புரிந்துகொள்ளவும் ஆராயவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.
தாய்மொழிப் புழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட 'உங்கள் விரல்நுனியில் செய்திகள்' திட்டத்தின் கீழ், தமிழ் முரசின் திங்கட்கிழமை பதிப்பின் மின்னிலக்க வடிவத்தை மாணவர்கள் பெறுவர். திங்களன்று பொதுவாக தமிழ் முரசு செய்தித்தாளுடன் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வெளியிடப்படுகின்றன.
தமிழ் முரசின் இன்ஸ்டகிராம் (@tamil_murasu), டிக்-டாக்(tamilmurasu_sg), யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் இளையர்களுக்காகவே பிரத்தியேகமான படைப்புகளை வழங்குகின்றன.
எஸ்பிஎச்சுடன் கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கும் புதிய முயற்சிகளில் ஊடகம் தொடர்பான திட்டங்களும் அடங்கியுள்ளன. உதாரணத்திற்கு, பள்ளிகளுடன் எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் இணைந்து மாணவர்களுக்குத் செய்தித்துறையில் உள்ள நிபுணர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கலாம்.
ஆசிரியர்களும் வேலை அனுபவங்களை எஸ்பிஎச்சில் பெற்றுக்கொண்டு தாங்கள் கற்றுக்கொண்டதைப் பள்ளியில் பகிர்ந்துகொள்ளலாம். தினமும் செய்திகளைப் படித்து நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்வதன் அவசியத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் எஸ்பிஎச் உதவியுடன் அறிந்துகொள்வர்.