சேலம்: வாங்க வந்தவர்கள்போல் நடித்து, 'புல்லட்'டை ஓட்டிச் சென்ற காதலர்கள், 75 நாள்களுக்குப்பின் பிடிபட்டனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 25. சேலம் பொன்னாம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பிரீத்தி, 22. இருவரும் சேலத்தில் ஒரு ஹோட்டலில் வேலைசெய்து வந்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இவ்விருவரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி சேலம், தாதுபாய்குட்டையில் ஒரு மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்திற்குச் சென்றனர்.
அங்கு ரூ.1,60,000 மதிப்புள்ள 'புல்லட்'டை வாங்க விரும்புவதாகவும் அதற்குமுன் அதனை ஓட்டிப் பார்க்க விரும்புவதாகவும் இவர்கள் கூறினர். இவர்களது வார்த்தையை நம்பி, கடைக்காரரும் சாவியைத் தர, காதல் இணை வண்டியோடு பறந்தது. போனவர்கள் திரும்பி வராததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த இருவரும் 75 நாள்களுக்குப்பின் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.