'டிஎஸ்ஏ' எனும் நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்திற்கு இவ்வாண்டு நேரடி நேர்காணல்கள் மீண்டும் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்திட்டம், தேர்வு முடிவுகளுக்கு அப்பால் மாணவர்களின் இதர திறன்களைக் கருத்தில்கொண்டு உயர்நிலைப் பள்ளிகளிலும் தொடக்கக் கல்லூரிகளிலும் அவர்கள் சேர வகைசெய்கிறது.
நேரடி நேர்காணல்களின் மூலம் விளையாட்டு, இசை உள்ளிட்டவற்றில் தங்களுக்கு இருக்கும் திறன்களை மாணவர்களால் மேலும் நன்றாக வெளிப்படுத்தமுடியும்.
நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்தில் 142 உயர்நிலைப் பள்ளிகளும் 20 தொடக்கக் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் பெற்றோரும் இன்று முதல் அவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இன்று பிற்பகல் மூன்று மணி முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதிவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
அண்மையில் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதற்கு ஏற்றவாறு நேரடி நேர்காணல்கள் மீண்டும் நடத்தப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு கூறியது. மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் ஆகியோரில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் இது சாத்தியப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டு முதல் கூடுதலான மாணவர்கள் நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்தின்வழி பள்ளிகளில் சேர்க்கப்படலாம்.
முன்னதாக அரசாங்க ஆதரவுடன் இயங்கும் தொடக்கக் கல்லூரிகளின் ஈராண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைப் பாடத் திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களில் 10 விழுக்காட்டினர் நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்தின்வழி சேர்க்கப்பட்டனர். அந்த விகிதம் 20 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கை திட்டத்திற்கு 31,400 விண்ணப்பங்கள் பதிவாயின. இந்த எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டு பதிவானதைவிட 900 அதிகம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் முன்னதாகவே சேர்ந்துகொள்வதற்கான விண்ணப்பங்களையும் இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து சமர்ப்பிக்கலாம். மாணவர்கள் மேற்கொள்ள விரும்பும் பாடத் திட்டங்களின் தொடர்பில் அவர்களுக்கு இருக்கக்கூடிய திறன்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு சேர்க்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கான நடவடிக்கை அடுத்த மாதம் ஆறாம் தேதியன்று தொடங்கும்.