மோனலிசா
கல்வியாளர், செய்திப் படைப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எழுத்தாளர் பொன். சுந்தரராசுவின் முதல் நாவல் 'சுண்ணாம்பு அரிசி'.
ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூர் மக்கள் அனுபவித்த துன்பங்களை விவரிக்கும் இந்நூலின் அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது.
"ஜப்பானியர் ஆட்சிக் காலப் பின்புலத்தில் ஏதாவது கதை அல்லது கட்டுரை எழுதியிருக்கிறீர்களா?" என்று தம்மிடம் ஒருவர் கேட்டதாகவும் அந்தக் கேள்வி ஏற்படுத்திய உந்துதலே இந்நாவல் எழுதக் காரணமாக அமைந்தது என்றும் பகிர்ந்துகொண்டார் திரு பொன். சுந்தரராசு.
"இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் ஜப்பானியர் ஆட்சியின்கீழ் சிங்கப்பூர் மக்கள் அனுபவித்த துன்பங்களை இப்புதினத்தில் ஆசிரியர் விவரித்துள்ளார். உள்ளூர்ச் சூழலைப் புரிந்து கொண்டு அதை மையப்படுத்தி எழுதும் வரலாற்றுப் புதினங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. இதுபோன்ற நூல்கள் தமிழில் அதிகம் வரவேண்டும். இவற்றின் மூலம் சிங்கப்பூரைப் பற்றிய அரிய தகவல்களையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல முடியும்," என்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு. மனோகரன் கூறினார்.
"வட்டார வழக்கில் புதினம் எழுதுவது மிகக் கடினம். அதனை உணர்ந்த ஆசிரியர் தேவையான இடங்களில் மேற்கோள் கொடுத்திருப்பது, அந்தக் காலப் பேச்சு வழக்கையும் எழுத்து வழக்கையும் புரிந்துகொள்ள அதிகம் உதவுகிறது," என்றார் வாழ்த்துரை வழங்கிய முனைவர் சுப. திண்ணப்பன்.
"அன்றைய வாழ்க்கை முறையையும் போர்க்காலச் சூழலின் மனிதநேயத்தையும் சுட்டியிருப்பது, அன்றைய சிங்கப்பூர் மக்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது. வரலாற்றுப் பதிவுகளை கற்பனைக் கதைமாந்தர்கள் வழி புதினமாகப் படிக்கும் பொழுது அது மாணவர்களை அதிகம் சென்றடையும்," என்றார் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பன்.
இந்நிகழ்வில் 'ஸூம'் வழி இணைந்த தமிழக எழுத்தாளர் சாரு நிவேதா 'கிரேண்ட் நரேட்டிவ்' எனும் பெருங்கதையாடல் பற்றிப் பேசினார். இன்றைக்குப் பெருங்கதையாடல்கள் தேவையில்லை என்றும் சிறு கதையாடல்களே தேவை என்றும் அவர் கூறினார்.
"போர்க்காலச் சிரமங்களைக் குறைக்க மக்கள் சிங்கப்பூரைச் சுற்றியிருந்த தீவுகளில் குடியமர்த்தப்பட்டதும், இனங்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது," என்றார் எழுத்தாளர் அழகுநிலா.
நாவலின் அருமையான சொற்றொடர்களையும் குறியீடுகளையும் எடுத்துக்காட்டிப் பேசினார் எழுத்தாளர் ஷாநவாஸ்.
நிகழ்ச்சியில் மேலும் பலர் நூல் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.