மொழிபெயர்ப்பு பற்றி தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள் மேலும் கற்றுக்கொள்ள தொடர்பு தகவல் அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த பயிலரங்கு சென்ற புதன்கிழமையன்று மெய்நிகராக நடைபெற்றது.
பயிலரங்கின் முதல் பகுதியாக தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்புப் பயிற்றுவிப்பாளர் திரு ஆ. பழனியப்பன் மொழி
பெயர்ப்பு பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
மொழிபெயர்ப்பின் தேவைகள், அதன் வரலாறு, மொழிபெயர்ப்பில் அகராதியின் பங்களிப்பு ஆகிய கூறுகளை திரு பழனியப்பன் விளக்கினார்.
பயிலரங்கின் அடுத்த அங்கமாக தமிழ் முரசு நாளிதழின் உதவி ஆசிரியர் திருமதி சுபாஷினி சிவானந்தனும் துணை செய்தி ஆசிரியர் திரு இர்ஷாத் முஹம்மதுவும் செய்தித்துறையில் மொழிபெயர்ப்பின் பங்கு பற்றி கருத்துரைத்தனர்.
மொழிபெயர்ப்புக்குத் தேவையான திறன்களைப் பற்றியும், அர்த்தம் மாறாமல் தகவல்களை அதே உணர்வுடன் வாசகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு மொழி
பெயர்ப்பைத் துல்லியமாக செய்யவேண்டியதன் அவசியம் பற்றியும் அவ்விருவரும் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளிக்கூட ஆசிரியர்கள் பயிலரங்கில் கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்திப் பார்க்க இரு அங்கங்களிலும் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்றன.
சூழலுக்கு ஏற்ப சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள முதல் அங்கத்தில் சில ஆங்கிலச் சொற்களும் பழமொழிகளும் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இதேபோல், இரண்டாம் அங்கத்தில் ஆங்கில செய்தித்தாளில் இடம்பெற்ற கட்டுரைத் தலைப்பு ஒன்றை தமிழில் மொழிபெயர்த்துப் பார்க்கும் வாய்ப்பும் ஆசிரியர்களுக்குக் கிடைத்ததன.
"இப்பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நான் இதுவரை ஓர் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல்லை கண்டுபிடிக்கவேண்டும் என்றால் இணையத்தையே நாடி வந்தேன்.
"ஆனால், இன்று நடைபெற்ற திரு பழனியப்பனின் அங்கத்துக்குப் பிறகு துல்லியமான மொழிபெயர்ப்புக்காக அதிக அளவில் அகராதியைப் பயன்படுத்த முடிவு செய்து உள்ளேன்.
"அதே நேரம், மாணவர்களின் தன்மையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குப் புரியும் விதத்தில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியதைப் பற்றியும் மேலும் தெரிந்துகொண்டேன்," என்றார் பாயலேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் தொடக்கப்பள்ளியின் தமிழ் ஆசிரியை திருமதி நூருல் வசிமா, 28.
"ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது, அதை எந்த அளவுக்குச் சுருக்கமாகவும் தெளிவாகவும் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்யவேண்டும் என்று இப்பயிலரங்கிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
"அதே சமயம், வார்த்தைகளின் பின்னணியையும் கருத்தில்கொள்வது எவ்வளவு முக்கியம் என்றும் இப்பயிலரங்கு சுட்டிக்காட்டியது.
"இதுபோன்ற பயிலரங்குகளில் ஆசிரியர்களுக்கு மேலும் சில பயிற்சி நடவடிக்கைகளை நடத்தினால் நன்றாக இருக்கும்," என்று தெரிவித்தார் புக்கிட் தீமா தொடக்கப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் திரு ஜேசுதாஸ் ஜோசஃப் பத்ரோஸ், 40.