ஆ. விஷ்ணு
வர்தினி
ஹர்ஷிதா
பாலாஜி
கடந்த ஆண்டைவிட பணவீக்கம் இவ்வாண்டு 2.6% அதிகரித்து உள்ளது. கடந்த ஓராண்டாகவே விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், குறிப்பாக உணவுப்பொருள்களின் விலையேற்றம் மக்களைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கொவிட்-19 கட்டுப்பாடுகளால் உற்பத்தி, விநியோகத் துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகள், ரஷ்யா-உக்ரேன் போர் போன்றவை விலையேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. தவிர்க்க முடியாத இந்த விலையேற்றத்தை வணிகங்களும் குடும்பங்களும் எப்படிச் சமாளிக்கின்றன என்பதை அறிந்தும் ஆராய்ந்தும் வந்தது தமிழ் முரசு.
சிங்கப்பூர் பெரும்பாலும் உணவுப் பொருள்களுக்கும் மளிகைப்பொருள்களுக்கும் இறக்குமதியையே சார்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களைவிட, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் விலை இவ்வாண்டு பலமடங்கு உயர்ந்துவிட்டது என்று தமிழ் முரசிடம் பேசிய கடைக்காரர்களும் மொத்த விற்பனையாளர்களும் கூறினர்.
தற்சமயம் விமானப் போக்குவரத்து கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலைக்குத் திரும்பி வருவதைத் தொடர்ந்து, விலையேற்றம் மட்டுப்படும் என எதிர்பார்த்திருந்த மளிகைக் கடைக்காரர்களுக்கு அண்மைய நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.
உற்பத்தி, போக்குவரத்துச் செலவினங்கள் அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் மளிகைப் பொருள்களின் விலை 10%-15% கூடியுள்ளதாகக் குறிப்பிட்டார் சென்னை டிரேடிங் & சூப்பர்மார்ட் கடை நிர்வாகி வை. ராமமூர்த்தி.
இம்மாதம் கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்த இந்தியாவின் முடிவும், செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த எண்ணும் இந்தோனீசியாவின் திட்டமும் அவற்றின் விலைகளைப் பாதிக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருள்களான பால், நெய், எண்ணெய் முதலியவை மார்ச் மாதத்திலிருந்து விலை ஏறியுள்ளது. சமையல் எண்ணெய் விலை முன்பில்லாத வகையில் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது.
விலை கூடியதால்
வாங்கும் அளவு குறைந்தது
வாடிக்கையாளர்களில் சிலர் அதிருப்தி தெரிவித்தாலும், பெரும்பாலோர் உலக நடப்புகளை அறிந்தே இருப்பதால் அவர்கள் பொருள் வாங்கும் போக்குகளை மாற்றிக்கொண்டுள்ளனர் என்று பெரும்பாலான கடைக்காரர்கள் கூறினர்.
"பொதுவாக, ஒரு கிலோ பருப்பு வாங்குபவர்கள் இப்போது அரை, கால் கிலோவாக குறைத்துவிட்டனர். நேற்று ஒரு விலை, இன்று ஒரு விலையா என்று கேட்போருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை," என்றார் தண்டபாணி கம்பெனி நிர்வாகி மீனா ஞானபண்டிதன், 44.
அதேபோல, உக்ரேன்-ரஷ்யப் போரினால் பாதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் இருந்து வரக்கூடிய சமையல் எண்ணெய் இறக்குமதியை பாதித்து இருப்பதாகக் கூறினார் சில்லறை வணிகர் ஒருவர். இதனால், அதன் விலை ஓரிரண்டு வெள்ளி கூடியுள்ளது என்றார் அவர்.
கொவிட்-19 சூழலில் முடக்கநிலையைத் தவிர்க்க வீட்டு விநியோக சேவையைத் தொடங்கிய கடைகள் தற்போது எரிபொருள் விலையேற்றத்தினால் திணறி வருகின்றன.
"இலவச வீட்டு விநியோக சேவை வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தது. ஆனால், இப்போது குறைந்தபட்ச விலையை அல்லது விநியோகக் கட்டணத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடுகிறோம்," என்றார் வீரா மேங்கோஸ் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி.
இந்தியன் சூப்பர்மார்க்கெட் கடை நிர்வாகி வித்யா சேகரும், கடந்த சில மாதங்களாகக் குறைந்தது 50 வெள்ளிக்குப் பொருள் வாங்குவோருக்கே இலவசமாக வீட்டிற்கு விநியோகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
விலை ஏறியிருந்தாலும் வாடிக்கையாளர்கள்மீது சுமையை ஏற்றாமல் இருக்க முயன்று வருவதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் தெரிவித்தது. அண்மைக் காலத்தில் எண்ணெய், முட்டை போன்றவற்றுக்கு விலைக்கழிவுகளையும் அது வழங்கி வருகின்றது.
சிங்கப்பூரின் முட்டைப் பண்ணைகளில் ஒன்றான செங் சூன் முட்டைப் பண்ணையில் ஏற்பட்ட கிருமித்தொற்றினைத் தொடர்ந்து, ஃபேர்பிரைஸ், ஜயன்ட், ஷெங் சியோங் அங்காடிகளில் ஏழு வெள்ளியை எட்டிய 30 முட்டைகளின் விலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. கோழிக்குக் கொடுக்கப்படும் உணவின் விலையேற்றமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
ரொட்டியின் மூலப்பொருளான கோதுமையின் இறக்குமதி ரஷ்ய-உக்ரேன் போரால் பாதிக்கப்பட்டு உள்ளதால், இவ்வாண்டு ரொட்டிவிலையும் ஏறக்குறைய 20 காசு உயர்ந்துவிட்டது.
மும்முடங்கு கூடிய போக்குவரத்துச் செலவு
உக்ரேன்-ரஷ்யா இடையே போர் தொடங்குவதற்கு முன்னரே, கொவிட்-19 சூழலால் கப்பல் போக்குவரத்துச் செலவு மூன்று மடங்கு கூடிவிட்டது.
பொருள் விலை குறைவாக இருந்தாலும் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருந்ததால் மற்றச் செலவுகளும் கூடின. போர் தொடங்கிய பிறகு பெட்ரோல் விலை மேலும் தாறுமாறாக ஏறியதால் போக்குவரத்துக் கட்டணங்கள் மேலும் கூடியதுடன் பல மூலப் பொருள்களின் விலையும் அதிகரித்துவிட்டது என்றார் ஸ்ரீவிநாயகா எக்ஸ்ஃபோர்ட்ஸ் நிறுவனத்தின் திரு ஜோதி மாணிக்கவாசகம்.
"உக்ரேனிலிருந்து சூரிய காந்தி விதை ஏற்றுமதி நின்றுவிட்டதால் சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியும் ஒரு மாத காலத்துக்கு முற்றாக ஏற்றுமதியை நிறுத்தி இருந்தது. தடை நீக்கப்பட்ட பிறகு எண்ணெய் விலை இரட்டிப்பாகிவிட்டது.
"மேலும், முன்கூட்டியே ஒப்பந்தம் செய்த விலைகளை ரத்து செய்த நாடுகள், போர்க்கால அடிப்படையில் புதிய விலைக்கு விற்கின்றன. போருக்குமுன் அடக்கவிலை ஒரு லிட்டருக்கு 1 அமெரிக்க டாலராக இருந்த சூரியகாந்தி எண்ணய், இப்போது இரண்டு டாலராகிவிட்டது.
"ஒரு கொள்கலன் சூரியகாந்தி எண்ணெய் பிப்ரவரியில் 25,000 டாலராக இருந்தது. இப்போது அதனை 38,000 டாலருக்கு வாங்கி இருக்கிறோம்.
"இந்தியாவும் துருக்கி, உக்ரேனில் இருந்துதான் சூரியகாந்தி எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. அதனால், அங்கிருந்து இறக்குமதியாகும் எண்ணெய் விலை கூடிவிட்டது.
"கப்பல் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பால் போலந்தில் இருந்து வரும் பால் விலை கூடிவிட்டது, இத்தாலியிலிருந்து வரும் தக்காளிச் சாற்றின் விலை 40% கூடிவிட்டது," என்று விலையேற்றம் குறித்து விளக்கினார் 62 வயது திரு ஜோதி மாணிக்கவாசகம்.
லாபத்தைக் குறைத்துக் கொண்ட கடைக்காரர்கள்
விலையேற்றத்தைச் சமாளிக்க லாபத்தைக் குறைத்துள்ளதாகக் கூறிய அவர், அப்போதுதான் மக்கள் வாங்குவார்கள், பணப்புழக்கம் இருக்கும் என்றார்.
"எவ்வளவு விரைவில் பொருள்களை விற்க முடியும் என்பதிலேயே இப்போது கவனம் செலுத்துகிறோம். முன்னர் ஓரிரு மாதங்களுக்கான சரக்கு இருக்கும். இப்போது ஒரு மாதத்திற்குத்தான் சரக்கு வைத்திருக்கிறோம்.
இதன்மூலம் சேமிப்புக் கிடங்கு வாடகைச் செலவைக் குறைக்கிறோம். அதேபோல், ஊழியர் செலவைக் குறைக்க, மிகைநேரப் பணி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்," என்று செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.
"மலேசியா கோழி ஏற்றுமதியை நிறுத்தவிருக்கிறது. இந்தியா சர்க்கரை, கோதுமை ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.
"இப்படி ஒவ்வொரு நாடும் தங்கள் தேவைகளைக் கருதி ஏற்றுமதியை நிறுத்தும்போது, சிங்கப்பூர் போன்ற இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் தீர்வு கிடைக்கும்," என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார் 27 ஆண்டுகளாக மொத்த விற்பனைத் தொழில் செய்துவரும் திரு ஜோதி மாணிக்கவாசகம்.
உணவுப்பொருள் இருப்பை உறுதிப்படுத்த தொடர் முயற்சி
தத்தம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உணவுப்பொருள் ஏற்று மதிக்குச் சில நாடுகள் தடைவிதிப்பது சிங்கப்பூர் போன்ற இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அத்துடன், ரஷ்யா-உக்ரேன் போர், உயர்ந்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளாலும் உணவு விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறால் சிங்கப்பூரும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆயினும் அது வியப்பான ஒன்றல்ல என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இருப்பினும், போதிய அளவிற்கு உணவுப் பொருள்கள் இருப்பதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் நீண்டகாலமாகவே பல முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.
கையிருப்பை அதிகப் படுத்துவதும் உணவுப் பொருள்களைப் பெறும் வழிகளைப் பலமுனைப் படுத்துவதும் அவற்றில் அடங்கும்.
"உணவுப்பொருள்கள் ஓரிடத்தில் இருந்து வருவது தடைபட்டால், அதாவது ஓர் இடத்தில் இருந்து கோழியை வாங்க முடியவில்லை என்றால் இதர நாட்டில் இருந்து நாம் அதை வாங்க முடியும்," என்றார் அவர்.
ஆயினும், இப்போது புதிய கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போல், அடுத்ததாக வேறு ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம் என்பதால் எதையும் எதிர்கொள்ளத் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.