புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது கடைசி டெஸ்ட்டில் விளையாடும் நியூசிலாந்தின் மெக்கெல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப் பட்டுள்ள குஜராத் லயன்ஸ் அணியின் சீருடையை வெளி யிடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அணியின் தலைவர் ரெய்னா இதுகுறித்துப் பேசினார்.
"மெக்கெல்லமின் சாதனை யைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் ஓர் இந்தியர் அந்த சாதனையை முறியடிப்பார் என்று நம்புகிறேன். "குஜராத் லயன்ஸ் அணியில் மெக்கெல்லம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியான விஷயம். அவர் துணிச்சலுடன் விளையாடும் வீரர். அவரைப் போன்ற வீரர்கள் தான் எங்கள் அணிக்குத் தேவை. "என்னைப் பொறுத்தவரையில் அணித் தலைவர் என்பது ஒரு பதவி மட்டும்தான். "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் விளையாடினேன். அந்தப் பசுமையான நினைவுகளை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது," என்றார் ரெய்னா.
குஜராத் லயன்ஸ் அணியின் சீருடை வெளியிடும் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா. படம்: ஏஎஃப்பி