இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரபல ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை கழுத்தில் கத்தியால் குத்திய ஆடவர் 24 வயது ஹடி மாத்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நேற்று(ஆகஸ்ட் 12) அந்த ஆடவர் கத்தியால் 75 வயது ருஷ்டியைக் குத்தினான்.
அதைத் தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டுள்ளது என்றும் அவர் இன்னும் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது முகவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ஒரு கண்ணையும் இழக்கக்கூடும் என்றும் அறியப்படுகிறது.
‘சாத்தானின் வசனங்கள்’ (satanic verses) என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
எழுத்தாளர்களுக்கான பிரசித்தி பெற்ற ‘புக்கர்‘ பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.
அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர், திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை கழுத்துப் பகுதியில் குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக சல்மான் ருஷ்டியிடம் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முற்படும் காட்சி, இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் உள்ளது.
அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.