பல வருடங்களுக்குமுன் வலைப்பந்து விளையாட்டாளராக இருந்த தன்னுடைய தாயாரைப் போலவே வலைப்பந்தில் சிறந்து விளங்குகிறார் சிஎச்ஐஜே தோ பாயோ பள்ளியில் உயர்நிலை 2 பயிலும் தான்யா.
"விறுவிறுப்பான வலைப்பந்து விளையாட்டுகளைப் பார்க்கும்போது எனக்கும் அதுபோல் ஆட வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும். வலைப்பந்து விளையாடத் தொடங்கிய பிறகு இந்த விளையாட்டின் மீது எனக்கு ஆர்வமும் மரியாதையும் கூடிவிட்டன," என்கிறார் தான்யா.
சில தினங்களுக்குமுன் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும் சிஎச்ஐஜே தோ பாயோ உயர்நிலைப் பள்ளிக்கும் நடந்த வலைப்பந்து தெற்கு மண்டல 'சி' பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் தான்யாவும் அவரது குழுவும் விளையாடினர். 31க்கு 23 எனும் புள்ளிக்கணக்கில் தான்யாவின் குழு வெற்றி வாகை சூடியது.
"அந்த காலத்தில் பள்ளியில் நான் விளையாடிய அதே நிலையில், என் மகள் விளையாடுவதைக் காணும்போது பெருமையாக இருக்கிறது," என்று கூறினார் தான்யாவின் தாயார் திருமதி ஷாமினி குணசீலன்.
"எங்கள் மகள் கல்விக்கும் விளையாட்டுக்கும் தன் நேரத்தைச் சமமாக ஒதுக்க எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம். இரண்டிலும் விடா முயற்சியுடன் ஈடுபட நாங்கள் அவளை ஊக்குவிக்கிறோம்," என்று கூறினார் தான்யாவின் தந்தை சிவகுமார் மாடேரியா.
"போட்டியில் கோல் ஷூட்டராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கொரு மறக்கமுடியாத பயணம். பல புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது நாங்கள் அனுபவித்த களைப்புக்கும் வலிக்கும் பலன் கிடைத்ததுபோல் இருந்தது," என்று கூறினார் தான்யா.
"போட்டியில் வெற்றிபெறக் குழு உணர்வு மிக முக்கியம். பயிற்சி செய்யும்போது, பல சவால்களுக்கிடையே எங்களுக்குள் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டோம். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டோம்," என்று தான்யா குறிப்பிட்டார்.
அதே பள்ளியில் உயர்நிலை 1ல் பயிலும் சஹானா ஆனந்த், மூத்த விளையாட்டாளர்களுடன் விளையாடுவதில் தான் பெருமை கொள்வதாகக் கூறினார்.
'சி பிரிவு' குழுவில் தன் பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடும் வாய்ப்பு உயர்நிலை ஒன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவியான தனக்கு அளிக்கப்பட்டதில் பெருமிதம் என்றார் அவர்.
ஒன்பது வயதிலிருந்தே வலைப்பந்து விளையாடிவரும் இவர், உயர்நிலைப் பள்ளியிலும் வலைப்பந்து விளையாட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கைத் திட்டத்தின் மூலம் சிஎச்ஐஜே உயர்நிலைப்பள்ளியின் வலைப்பந்து அணியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
"என் பெற்றோரும் உறவினர்களும் நான் விளையாடும் விளையாட்டுகளில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு என்னை ஆதரிப்பது என் மனதை நெகிழ வைக்கிறது," என்றார் சஹானா.
அடுத்த ஆண்டுக்கான போட்டிகளுக்கு இவ்வாண்டு நவம்பர் முதல் தங்கள் குழுவின் பயிற்சி தொடங்கிவிடும் என்று கூறிய சஹானா, எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாட்டாளர்கள் விடாமுயற்சியைக் கைவிடக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.
செய்தி: காயத்திரி காந்தி