மதிய உணவு இடைவேளைகளில் சக ஊழியர்கள் ஓய்வெடுக்கும் போது ஆறுகள் ஓடுவதையும் குருவிகள் பறப்பதையும் ரசித்துக்கொண்டே கவிதைகளை எழுதுவார் 30 வயது வெற்றிச்செல்வன் இராசேந்திரன்.
இப்படி இவர் எழுதிய 58 கவிதைகள், 'கீதாரியின் உப்புக்கண்டம்' என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய நூலக வாரியத்தின் 'தி போட்' அரங்கில் கவிமாலையின் மாதாந்திர சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
ஒன்பது ஆண்டுகளாக சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் பொறியாளராகப் பணிபுரியும் கவிஞர் வெற்றிச்செல்வன், ஆடு மேய்ப்பதை வாழ்க்கையாகக்கொண்ட சமூகத்தின் பாடுகளையும் மகிழ்ச்சிகளையும் பிரிவுகளையும் ஆறுதல்களையும் பாசாங்கில்லாத செறிவான மொழியில் இத்தொகுப்பில் 58 கவிதைகளாகத் தந்துள்ளார்.
விற்றுப்போன குட்டியை இழந்த ஆடுகளின் தவிப்பு, குட்டி ஈன்ற ஆடுகளின் நஞ்சுக் கொடிகளுக்காக அலையும் கிடைகாக்கும் நாயின் தவிப்பு, பசித்தும் உண்ண மனமில்லாத ஆடு மேய்க்கும் கீதாரிகளின் தவிப்பு என்று மொத்த சூழலையும் அடக்கமான சிறுசிறு சொற்களில் தீவிரம் குன்றாமல் கொணரும் வன்மை இந்தக் கவிஞருக்கு இருக்கிறது.
தன்னைக் காட்டிலும் உயரமான கம்புடன், ஒற்றைக்காலில் நின்று, ஆடுமேய்க்கும் கீதாரிகளை இக்கவிதைகளில் முதலில் கோட்டுச் சித்திர உருவமாகத் தீட்டி, பிறகு அவர்களின் குணங்களுடன் முப்பரிமாணத்தில் திரட்டி, ஒருகட்டத்தில் பால் வீச்சமும் வியர்வை நாற்றமும் மாறாத வீச்சுடன் உயிர்ப்புடன் வாசகர்முன் நிறுத்திவிடுகிறார்.
"கீதாரி என்பவன் தலைமை தாங்குபவன். சிறுசிறு குழுவாக ஆடுகளையும் மாடுகளையும் ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்காக செல்பவர்களை வழிநடத்துபவன். ஆனால் நிகழ்காலத்தில் கிடைபோடும் யாவரும் கீதாரிகள்தான். ஏனென்றால் குழுக்களாக இருந்தவர்கள் நாகரிக மாற்றம் மற்றும் அதீத தொழில்நுட்பத்தால் தனிநபர்களாக மாற்றப்பட்டுவிட்டனர்," என்றார் வெற்றிச்செல்வன்.
"உலகமெங்கும் ஒரே தொழில் புரியக்கூடிய மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் யாவரும் ஓர் இனக்குழு கிடையாது. இந்த இடையர் இன மக்கள் தமிழ் நிலத்தின் மக்கள். தொன்மையான தொழில் புரியும் இவர்களுக்கென்று எழுதிய முதல் கவிதைத் தொகுப்பாக இதுதான் இருக்கும்," என்று கருதும் வெற்றிச்செல்வன், கீதாரிகளின் வாழ்வியலை ஒரு நாவலாக எழுதி வருகிறார். 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றின்போது வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 'தேக்காவில் பொம்மை வாங்குபவன்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை முதல் பரிசை வென்றது.
தமிழ்மொழி மாதத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற 'சிங்போரிமோ' தமிழ் கவிதை எழுதும் போட்டியில் கடந்த ஆண்டு, இறுதிச் சுற்றில் தேர்வான ஆறு போட்டியாளர்களில் இவரும் ஒருவர். 16 வயதில் கவிதை எழுதத் தொடங்கிய வெற்றிச்செல்வன் சிங்கப்பூர் தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இவரின் இந்நூலை அப்பர் டிக்சன் சாலையில் உள்ள ஆர்யா கிரியேஷன்ஸ் என்ற கடையில் பெறலாம்.
செய்தி: பொன்மணி உதயகுமார், சிவானந்தம் நீலகண்டம்