ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துணைப்பாட நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
துணைப்பாட நிலையத்தில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 27 பேர் காயமடைந்ததாக காபூல் காவல் துறை பேச்சாளர் குறிப்பிட்டார். மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டது. மாண்டோர் எண்ணிக்கை 33 என தலிபான் தரப்பு சொன்னது. மாண்டோரில் பல பெண் மாணவர்களும் அடங்குவர் எனக் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து பெண்களுக்கான உயர்நிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் பெண்கள் தொடர்ந்து தனியார் துணைப்பாட நிலையங்களுக்குச் செல்கின்றனர்.