அனுஷா செல்வமணி
கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதற்கும் எந்த சவாலையும் சமாளித்து தங்கள் இலக்கை அடைவதில் முழுக் கவனத்தையும் செலுத்தி வெற்றி பெற்ற இருவர் நேற்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
கடந்த புதன்கிழமையிலிருந்து நேற்று வரை பல்கலைக்கழகத்தின் மண்டபத்தில் பட்டமளிப்புகள் நடைபெற்றன. பட்டம் பெற்ற 2,800 பட்டதாரிகள் பெரும்பாலும், முதுகலை பட்டம் பெற்றார்கள்.
சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங், "கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் நமது சமூகத்திற்கும் நம்மால் முடிந்த பங்களிப்பை ஆற்ற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
மனிதநேயம், நடத்தை அறிவியல் பள்ளியில் பயின்று தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் இளநிலை பட்டம் பெற்றார் 44 வயதான திருமதி புவனேஸ்வரி முருகன். தன் தாயாருடனும் இரண்டு மகள்களுடனும் வசிக்கும் திருமதி புவனேஸ்வரி, 2019ஆம் ஆண்டில், தேர்வுகள் தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் இருக்கையில், தம் கணவரை இழந்தார்.
தற்போது பீட்டி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் இவர், இதற்கு முன்னர் எட்டு ஆண்டுகளாக நிதித் துறையில், மென்பொருள் சோதனை ஆய்வாளராக இருந்தார்.
மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டுவது தமிழ் ஆசிரியர்கள் என்று கூறும் திருமதி புவனேஸ்வரி, 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பு தொண்டூழியராக இருந்து வந்தார்.
திருமதி புவனேஸ்வரி முழுநேர வேலை பார்த்துக்கொண்டே சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி, இலக்கியம் பட்டப் படிப்பில் சேர்ந்தார். வேலை ஒருபுறம், படிப்பு மறுபுறம் என, அவர் தம் கணவரின் ஆதரவோடு இரண்டையும் சமாளித்து வந்தார். "என் கணவர் என்னுடைய தமிழ்மொழி ஆர்வத்தைக் கண்டு, இந்தப் படிப்பில் சேர பரிந்துரைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் பயணித்திருக்க மாட்டேன்," என்றார் திருமதி புவனேஸ்வரி.
கணவரின் திடீர் மறைவு அவரை புரட்டிப் போட்டிருந்தாலும், திருமதி புவனேஸ்வரி துவண்டுபோகவில்லை. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தப் பேரிழப்பு, தன்னுடைய படிப்புக்கு ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்று விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி நேற்று பட்டம் பெற்றார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரியாகப் பணிபுரியும் 41 வயது திரு த.சீதாதரன், உளவியலில் இளநிலை பட்டம் பெற்றார். நிபுணத்துவ வாரண்ட் அதிகாரி பயிற்சிக் கழகத்தில் தலைமை பயிற்சி அதிகாரியாக உள்ள இவர், தம் கல்விப் பயணத்தை பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்றவுடன் நிறுத்தினார்.
படையில் சேவை புரிந்த தமது 17வது ஆண்டில், திரு சீதாதரனுக்கு இளநிலை பட்டப் படிப்புக்கான சிங்கப்பூர் ஆயுதப்படையின் உபகார சம்பளம் வழங்கப்பட்டது. கடைசியாக படித்தது 20 ஆண்டுகளுக்கு முன் என்பதால், அவருக்கு இந்த திடீர் மாற்றம் ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர் படித்த காலத்தை ஒப்பிடுகையில், கற்றல்முறை இப்பொழுது வெகுவாக மாறியுள்ளது என்ற அவர், இப்போது கல்வியில் சுய கற்றல் அதிகம் இருப்பதும், தொழில்நுட்பத்தை ஒட்டி பாடங்கள் நடத்தப்படுவதும் தாம் கண்ட பெரிய மாற்றம் என்றார்.
"வயது குறைந்தவர்களும் என் வயதில் இருக்கும் பெரியவர்களும் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தையும் இலக்கையும் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் சாதிக்க நேரமும் வயதும் ஒரு தடைக்கல் அல்ல," என்கிறார் சீதாதரன்.