பொன்மணி உதயகுமார்
திரைப்படத் தயாரிப்பின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிய ஆர்வம் கொண்ட 22 வயது அலீஷா ரணே அபிஜீத் (படம்), படப்பிடிப்பு, புகைப்படம் எடுத்தல், திரைப்பட ஒலிப்பதிவு போன்ற பலதரப்பட்ட அம்சங்களில் தன் திறன்களை வளர்க்க விரும்பினார்.
அண்மையில் நன்யாங் நுண்கலைக் கழகத்தில் (நாஃபா) திரை ஊடகத் துறையில் பட்டம் பெற்ற இவர், 'நாஃபா சேர்மன்' விருதையும் பெற்றார்.
மாணவர்களின் சாதனைகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.
சிறுவயதில் முக்கியமான தருணங்களைத் தன் தாயார் காணொளி, புகைப்படங்கள் மூலமும் பதிவிட்டதைப் பார்த்து வளர்ந்த அலீஷாவிற்கு இயல்பாகவே புகைப்படங்கள் மீதும் திரைப்படம் மீதும் ஆர்வம் வளர்ந்தது. ஏழு வயதில் 'ஒலிம்பஸ் ஃபில்ம்' புகைப்படக் கருவியைப் பரிசாகப் பெற்றார்.
"நான் திரைப்படங்களைப் போல புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். காலப்போக்கில், திரைப்படத் தயாரிப்பு என்பதும் கலை வடிவங்களில் ஒன்று என்றும் அது பார்ப்பவருக்கு இன்பம் அளிக்கக்கூடியது என்பதும் எனக்குப் புரிந்தது. இந்தக் கலை வடிவம் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் நான் அதில் நாட்டம் குறையாமல் இருக்கிறேன்," என்றார் அலீஷா.
சிங்கப்பூர் இரவுநேர விழா 2021ல் பிராஸ் பாசா, புகிஸ் வட்டாரத்தின் தாவரங்கள் பற்றி ஆவணப்படம் தயாரித்த அனுபவம் மாறுபட்ட ஒன்றாக இருந்தது என்று அலீஷா பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து திரைப்படம் தொடர்பான தனது கலைத்துறை அறிவை வளர்த்துக்கொண்ட அவர், கலைத்துறை, கலைப்படைப்புகள், கலைஞர்கள் குறித்துச் சமுதாயத்தின் பார்வை அடிப்படையில் 'யார் நீ' என்ற தலைப்பில் மற்றோர் ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளார்.
தனது படைப்புகளில் தனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு இது என்றார் அவர்.
'சண்டே டைம்ஸ்' வெளியிட்ட கருத்தாய்வு முடிவுகளில் சமுதாயத்திற்கு அவசியமானவை என்று கருதப்படும் வேலைகள் குறித்து கேட்கப்பட்டபோது, கலைஞர்கள் பார்க்கும் வேலைகள் சமுதாயத்திற்கு அவ்வளவு அவசியமில்லை என 1000 பேரில் 71 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.
இது கலை மீது பேரார்வம் கொண்டுள்ள அலீஷாவின் சிந்தனையைப் பெரிதும் தூண்டிவிட்டது. இவரது படைப்பிற்கு அது உந்துசக்தியாக அமைந்தது.
"கலை என்பது அத்தியாவசியம் அன்று என்ற கருத்து பொதுவாகவே நிலவுவதை நான் அறிவேன். ஆனால், வளர்ச்சி கண்ட நாடுகளிலும் இதுபோன்ற சிந்தனை இருப்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது," என்றார் இவர்.
தன் கலைப்படைப்புகள்வழி எதிர்காலத்தில் இதுபோன்ற எண்ணங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என விரும்புகிறார்.
இவர் யூடியூப் ஊடகத்தில் தொழில் தொடங்கிய பீட்டர் மெக்கின்னொனின் படைப்புகளைக்கண்டு திரைப்படத் துறையில் சாதிக்கும் உற்சாகத்தைப் பெற்றதாகப் பகிர்ந்துகொண்டார்.
வருங்காலத்தில் தன் பயணத்தை இவர் திரும்பிப் பார்க்கையில் தனக்குப் பெருமை அளிக்கக்கூடிய படைப்புகளையும் மற்றவர்களுக்கு இன்பமளிக்கும் படைப்புகளையும் உருவாக்க எண்ணம் கொண்டுள்ளதாகவும் அலீஷா குறிப்பிட்டார்.