பிரிட்டிஷ் அரசியாரை மும்முறை சந்தித்தது குறித்து இஸ்தானாவின் தலைமைப் பணியாளர்
பொன்மணி உதயகுமார்
மறைந்த பிரிட்டிஷ் அரசியார் 2006ல் சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்தபோது, இஸ்தானாவின் தலைமைப் பணியாளர் இஸ்மாயில் அப்துல் கனி அவரை சந்தித்திருந்தார்.
"நான் மூன்றாவது முறையாக அரசியாரை நேரில் சந்தித்தபோது, முதன்முதலில் நாங்கள் சந்தித்த தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார். அது எனக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் அளித்தது," என்றார் திரு இஸ்மாயில்.
2006ல் அரசியாருக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தின்போது அவருக்கு சேவையாற்றியவர்களில் இவரும் ஒருவர். விருந்திற்குப் பிறகு, அரசியாரை வழியனுப்பி வைக்கும் அணி வரிசையில் தலைமைப் பணியாளர்கள் நின்றபோது திரு இஸ்மாயிலிடம் அரசியார் உரையாடினார்.
அதற்கு முன்பு, 1972ல் சிங்கப்பூர் வந்திருந்த அரசியார், இஸ்தானாவில் தங்கியிருந்தார். 'பிரிட்டானியா' அரசு கப்பலில் இங்கு பயணம் செய்த அரசியாருக்கு கப்பலில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, அரசியாருக்கு விருந்தோம்பல் வழங்கிய குழுவில் பணியாளராக இருந்தார் திரு இஸ்மாயில். இன்று இஸ்தானாவின் தலைமைப் பணியாளராக உள்ள இவர், அன்று அரசியாரை முதல்முறையாக சந்தித்ததில் மகிழ்ச்சி கொண்டுள்ளார். அரசியாரை உபசரித்தது அற்புதமான ஓர் அனுபவமாக அமைந்தது என்று இவர் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாவது முறையாக 1989ல் இடம்பெற்ற மற்றோர் அரசு விருந்தில், மீண்டும் அரசியாரை உபசரிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆக, மூன்று முறை அரசியாரைச் சந்தித்ததை இனிய அனுபவமாக கருதும் திரு இஸ்மாயில், 2006ல் கடைசியாக அரசியாரைச் சந்திப்போம் என்பதை எதிர்பார்க்கவில்லை.
அரசியார் மறைந்த செய்தியை இவருடைய மூத்த மகன் இவருக்கு தெரியப்படுத்தி இருந்தார். இது, திரு இஸ்மாயிலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவருடைய தந்தையும் தாத்தாவும் இஸ்தானாவில் பணியாளர்களாக பணிபுரிந்த போதிலும் அவர்களுக்கு அரசியாரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. மூன்று முறை அரசியாரை சந்தித்துள்ள இவர், அரசியாரை அடக்கமும் கண்ணியமும் மிடுக்கும் நிறைந்தவராக நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார்.
u