சிங்கப்பூரின் முக்கியப் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இவ்வாண்டு பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளன.
ஓவியர் டிராட்ஸ்கி மருது, பண்பாட்டு அறிஞர் எம்.டி. முத்துக் குமாரசாமி, விருதுபெற்ற எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், குற்றப்புனைவு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்டோர் தமிழ்நாட்டி லிருந்து விழாவில் கலந்துகொள்வர்.
தமிழ்மறையாம் திருக்குறள் உலகத்துக்கு எடுத்துக்கூறும் கோட்பாடுகள் பற்றி விவாதிக்கும் பன்மொழி நிகழ்வும் உண்டு.
வரும் வெள்ளிக்கிழமை 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது சிங்கப்பூர் எழுத்தாளர் விழா. உலகின் மிகச் சில பன்மொழி இலக்கிய விழாக்களில் ஒன்றான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 1986ல் தொடங்கப்பட்டது.
தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த விழாவை தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து நடத்துகிறது. கலந்துரையாடல்கள், உரைகள், பயிலரங்குகள் போன்ற இலக்கிய நிகழ்ச்சி களுடன், இசை, நாடக நிகழ்ச்சிகள் கொண்ட பல்கலை நிகழ்வாக விழா விரிவடைந்துள்ளது.
வாசகர் வட்டம், கவிமாலை, பாஸ்கர் கலைக் கழகம், திங்க் தமிழ் அகாடமி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஓவிய, உயிரோவிய கலைஞரும் கலை இயக்குநருமான டிராட்ஸ்கி மருது இவ்வாண்டு கலந்துகொள்ளும் முக்கிய பன்முகக் கலைஞர்களில் ஒருவர்.
'சித்திரமும் அடையாளமும்: வரைகலை வரலாற்றில் தமிழ் அடையாளத்தின் பரிணாமம்' என்ற தலைப்பில் அவர் விரிவுரை ஆற்றுவார். நவம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை இந்நிகழ்ச்சி, இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெறும்.
இந்த விரிவுரையில், உலகத் தமிழர்களின் அடையாளத்தின்மீது திரைப்படங்கள் செலுத்தும் தாக்கம் பற்றி அவர் ஆராய்வார். தமிழ் வரைகலைகளின் தோற்றம், தமிழ் இலக்கியம், வரலாற்றை ஊக்கமாகக் கொண்டு கலை பற்றியும் டிராட்ஸ்கி மருது பகிர்ந்துகொள்வார். இந்நிகழ்ச்சி அரூ இணைய இதழுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட எம்.டி. முத்துக் குமாரசாமியுடன் கவிதை எனில், நாடகம்? எனும் உரையாடல் நிகழ்ச்சியும் இடம்பெறும்.
கவிதையிலிருந்து நாடகத்திற்கு என்ற கருப்பொருளில் கவிதை களின் நீட்சியாகும் நாடகம் குறித்து அவர் பகிர்ந்துகொள்வார். உரையைத் தொடர்ந்து, முத்துக்குமாரசாமி உள்ளூர் படைப்பாளர்களுடன் பேசும் கலந்துரையாடலும் உண்டு.
இரு வெவ்வேறு முனைகளில் இயங்கிவரும் வெகுசன இலக்கியம், தீவிர இலக்கியம் ஆகியவற்றுக்கு இடையில் பாலம் அமைப்பது பற்றிய நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் இடம்பெறும்.
சிங்கப்பூர் சார்ந்த நிகழ்ச்சிகள்
போர் நிகழாதிருந்தால்: இரண்டாம் உலகப்போரும் சிங்கைத் தமிழ் வரலாற்றுப் புனைவும் என்ற தலைப்பு கொண்ட அமர்வில் பொன் சுந்தரராஜு, ரமா சுரேஷ், ஹேமலதா ஆகிய உள்ளூர் எழுத்தாளர்கள் கலந்துரையாடுவர்.
இரண்டாம் உலகப்போர் நடந்திராவிட்டால், சிங்கப்பூர் தமிழ் வரலாற்று நாவல்களின் முக்கிய கருப்பொருளாக எதுவாக இருந்திருக்கக்கூடும் என்ற கேள்வியை முன்வைத்து மாற்று வரலாற்றுப் புனைவு குறித்து அமர்வு அலசும்.
நவம்பர் 6ஆம் தேதி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, தி ஆர்ட்ஸ் ஹவுஸ் கட்டடத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெறும்.
உணவுச் சொர்க்கமான சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் உணவைப் பற்றிய சுவையான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உணவின்றேல்: சிங்கப்பூர்த் தமிழ் வாழ்வும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஷாநவாஸ், வசுன், முகமது அலி கலந்துரையாடுவர். நவம்பர் 12ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி லரை ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.
உணவுக் கலாசாரம் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வளவு சுவையூட்டுகிறது, அது இல்லாதிருந்தால் நம் இலக்கியத்தின் சுவை எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் குறித்து உரையாடல் அலசும்.
நாடகத்துறை பற்றியும் எழுத்தாளர் விழாவில் பேசப்படும்.
பின்னணியின் பின்புலம்: கதையும், காட்சியும், கலை இயக்குநரும் என்ற தலைப்பிலான அமர்வில் நாடகம், திரைப்படம் மூலம் கதை சொல்லுவதில் கலை இயக்குநரின் பங்கு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
புகழ்பெற்ற உள்ளூர் நாடக இயக்குநர்களான, வடிவழகன் பிவிஎஸ்எஸ், ஜி செல்வநாதன், சுப்பிரமணியம் கணேஷ் ஆகியோருடன் டிராட்ஸ்கி மருது கலந்துகொள்வார்.
சிறுவர்களுக்கான இருமொழி கதைசொல்லும் பயிலரங்கு திங்க்தமிழ் அக்காடமியுடன் இணைந்து நடத்தப்படும்.
சிறுவர்களுக்கான இந்த நிகழ்வு, 12ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எஸ்டபுள்யூ வில்லேஜில் நடைபெறும். யோகேஸ்வரி பிரசாந்த் ஆடல், பாடல், கைவினைப் பொருள்களின் வழி கதை கூறுதல் போன்றவற்றை நடத்துவார்.
இவற்றுடன் மேலும் பல தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. மேல்விவரங்களுக்கு : https://www.singaporewritersfestival.com. விழா நுழைவுச்சீட்டுகள்: தலா 30 வெள்ளி.