சிங்கப்பூரில் கொரோனா கிருமி பரவும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள சாஃப்ரா ஜூரோங் பகுதியில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டிற்கு மக்கள் கழகத்திற்கும் வசிப்போர் குழுக்களுக்கும் சம்பந்தம் இருந்ததாக குறிப்பிடும் பொய்த் தகவலைத் திருத்த, ஃபேஸ்புக் பயனாளர்கள் மூவருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதியும் வழக்கறிஞருமான லிம் தியனும் அந்த மூன்று பேரில் அடங்குவார். சிங்கப்பூர் எதிர்க்கட்சியான ‘மக்களின் குரல்’ கட்சியின் தலைவராவார் அவர். “ஹென்ரிஏஸ் ஏஸ்”, செபஸ்டியன் யிங் ஆகியோர் எஞ்சிய இருவர். பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற அந்த சீனப் புத்தாண்டு இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதற்கு மக்கள் கழகமும் வசிப்போர் குழுக்களுமே பொறுப்பு என்று மேற்குறிப்பிடப்பட்ட அந்த மூவரும் பதிவிட்டிருந்தனர்.
அவர்கள் பதிவிட்ட பொய்த் தகவலைத் திருத்த உத்தரவிடும்படி மக்கள் கழகத்தின் துணைத் தலைவர் சான் சுன் சிங் கூறியதாக இணையம்வழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் மக்கள் கழகத்திற்கும் வசிப்போர் குழுக்களுக்கும் சம்பந்தம் இருந்ததாகக் குறிப்பிடும் பதிவுகள் “முற்றிலும் பொய்யானவை” என்று உண்மையான தகவலைச் சரிபார்க்கும் இணையப்பக்கமான ‘Factually’யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததில் மக்கள் கழகத்திற்கும் வசிப்போர் குழுக்களுக்கும் தொடர்பில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான நிலையிலும் அவை இல்லை. நிகழ்ச்சிக்கு அவை நிதி வழங்கவோ விளம்பரப்படுத்தவோ இல்லை. பாடல் சொல்லித் தரும் ஒருவர், அவரது பாடல் குழுவினருக்காக அந்த தனியார் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்,” என்று அந்த இணையப்பக்கம் குறிப்பிட்டுள்ளது.
பொஃப்மா அலுவலகம், பொய்த் தகவலைத் திருத்த திரு லிம்முக்கு உத்தரவிட்டிருப்பது இது மூன்றாவது முறை. கடந்த டிசம்பரில் அவர் வெளியிட்டிருந்த வேறொரு பதிவில் இடம்பெற்றிருந்த பொய்த் தகவலைத் திருத்த அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. கல்வியில், சிங்கப்பூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்காக அரசாங்கம் அதிக செலவு செய்வதாக திரு லிம்மின் பதிவு குறிப்பிட்டிருந்தது.
ஜனவரியில் வேறொரு விவகாரம் தொடர்பில், திருத்தக் குறிப்பு ஒன்றை வெளியிட அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சீனாவுக்குச் செல்லாத ஐந்து சிங்கப்பூரர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக ‘ஏபி-டிசி சிட்டி நியூஸ்’ எனும் இணையப்பக்கம் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றை திரு லிம் பகிர்ந்து இருந்தார்.