தோ பாயோவில் புதன்கிழமை காலை நிகழ்ந்த கார் விபத்தில் ஆடவர் இருவர் உயிரிழந்தனர்.
லோரோங் 8 தோ பாயோவில் நிகழ்ந்த அவ்விபத்து தொடர்பில் காலை 8 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அங்குள்ள சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.
விபத்தில் சிக்கிய 76 மற்றும் 83 வயதான இருவரும் சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆயினும், பின்னர் அவர்கள் இறந்துவிட்டனர்.
இதனையடுத்து, காரை ஓட்டியதாகக் கூறப்படும் 84 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.