செம்பவாங்கில் சன் செய்ல்ஸ் என்ற பெயரில் பிடிஓ வீடுகள் கட்டப்படுகின்றன. அங்கு வேலை பார்த்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் நேற்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
கட்டடக் கழிவுகளுடன் தொட்டி ஒன்றை பளுதூக்கி இயந்திரம் தூக்கியபோது அது இடித்து பத்தாவது மாடியிலிருந்து ஊழியர் தடுமாறி கீழே விழுந்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்த மனிதவள அமைச்சு, செம்பவாங் அவென்யூவில் கட்டப்பட்டு வரும் ‘371பி’ புளோக்கின் பத்தாவது மாடியில் இருந்தபோது பளுதூக்கி இயந்திரம் தொட்டியைத் தூக்குவதற்காக ஊழியர் வழிகாட்டிக் கொண்டிருந்தார் என்று கூறியது.
அப்போது அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த தொட்டி அவர் மீது மோதி கீழே விழுந்தார். ஜியான் ஸின் கட்டுமான நிறுவனம் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பல் 3.00 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய காவல்துறை, சுயநினைவை இழந்த ஊழியர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாகவும் கூறியது.
முதற்கட்ட விசாரணையில் இதில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையே மனிதவள அமைச்சு, கட்டுமானத் தளத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்தும்படி பிஎச்சிசி கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இந்த மரணத்தோடு சேர்த்து 20 பேர் கட்டுமானத் தளங்களில் பலியாகியுள்ளனர்.