வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 சூழல் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா, பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பொஃப்மா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகச் சங்கம், சேனல் நியூஸ் ஏஷியா(சிஎன்ஏ) , த ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா, நியூ நராடிஃப் ஆகியவற்றுக்கு மொத்–தம் ஐந்து திருத்த உத்தரவுகளை பொஃப்மா அலுவலகம் பிறப்பித்தது. இதனை ஏற்று சிஎன்ஏவும் என்யுஎஸ்எஸ்ஸும் திருத்தங்களை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதியில் போட்டியிடும் 55 வயது பால் தம்பையா, திருத்த உத்தரவு கவனத்தை திசை திருப்பக்கூடியது என்றார்.
“மனிதவள அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையை பற்றி நான் பேசியிருந்தேன்,” என்று முதலாளிகளுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை அவர் குறிப்பிட்டார்.
“மனிதவள அமைச்சே அதனை அனுப்பியிருந்தது. மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டாக அக்கடிதத்தை அனுப்பவில்லை. அந்த ஆலோசனைக் குறிப்பில் மனிதவள அமைச்சின் அதிகாரி கையெழுத்திட்டிருந்தார்,” என்று கூறி திரு பால் தம்பையா, இதனால் பொஃப்மா சட்டம் ஏற்றுக் கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படவில்லை என்று தமக்குத் தோன்றுவதாகத் தெரிவித்தார். முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு அனுப்பிய மின் அஞ்சல் குறிப்பில் வெளிநாட்டு ஊழியர்களிடையே மேற்கொள்ளப்படும் கொவிட்-19 சோதனைகள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையில்லாமலே மேற்கொள்ளப்படுகிறது என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா கூறியதாக பொஃப்மா அலுவலகம் குறிப்பிடுகிறது.
வெளிநாட்டு ஊழியர்களை மொத்தமாக மருத்துவமனைகளுக்கு கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பினால் முதலாளிகள் தங்களுக்குள்ள ‘வொர்க் பாஸ்’ சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவர் கூறியதாகவும் அது சொல்லியது. இவை இரண்டுமே தவறு என்று ‘பொஃப்மா’ தெரிவித்தது.