தங்கள் அன்புக்குரியவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்கள், இறுதிச் சடங்கிற்கான இடத்தையும் அச்சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாகன நிறுத்துமிடத்தையும் ‘மைலெகசி@லைஃப்எஸ்ஜி’ இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.
இத்தகைய பல மேம்பாடுகளை வரும் ஆண்டில் அந்த இணையத்தளம் காணும் என்று அறிவார்ந்த தேச குழுமமும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் (கவ்டெக்) அமைப்பும் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தெரிவித்தன.
மின்னிலக்கமயமாக்கலின் மூலம் அரசாங்க சேவைகள் மேம்பட்டு வருவதாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அறிவார்ந்த தேசத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, அரசாங்கச் சேவைகள் குறித்து 73 விழுக்காட்டினர் மனநிறைவு தெரிவித்த நிலையில், 2023ஆம் ஆண்டு அவ்விகிதம் 83 விழுக்காடாக அதிகரித்தது என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
லைஃப்எஸ்ஜி செயலி வழியாகப் பெறக்கூடிய ‘மைலெகசி’ சேவை 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்வழியாக, அதிகாரத்தைப் பிறருக்கு வழங்கவும் (பவர் ஆஃப் அட்டர்னி) மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடலுக்கும் விண்ணப்பம் செய்ய விரும்புவோர், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே விண்ணப்பம் வழியாக அதனைச் செய்ய இயலும்.
தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கவும் மீட்டுக்கொள்ளவும் ஏதுவாக சேமிப்பக வசதியையும் அந்த இணையத்தளம் வழங்குகிறது.
நாடாளுமன்றத்தில் தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது உரையாற்றிய டாக்டர் ஜனில், குடிமக்களுக்கு சிறந்த, ஒருங்கிணைந்த அரசாங்கச் சேவைகளை வழங்குவதில் கண்டுள்ள முன்னேற்றத்திற்கு இந்த இணையத்தளம் ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, ‘மைலெகசி’ தளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை கிட்டத்தட்ட 720,000 பேர் பார்வையிட்டுள்ளனர் என்று அறிவார்ந்த தேசக் குழுமமும் கவ்டெக் அமைப்பும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.
மாதந்தோறும் சராசரியாக 2,300 இறப்புச் சான்றிதழ்கள் ‘மைலெகசி’ மூலம் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் அவை தெரிவித்தன.