2022ல் சிங்கப்பூரில் உணவு உற்பத்தி குறைந்தது

2022ல் சிங்கப்பூரில் உணவு உற்பத்தி குறைந்தது

1 mins read
59ae95be-e4a5-4ba5-9435-02b9af61351e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்ளூர் விளைபொருள்களுக்கான தேவை குறைந்தது, கொவிட்-19 தொற்றுநோய் பரவலால் பண்ணைகளை அமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் 2022ல் சிங்கப்பூரில் காய்கறிகள், கடல் உணவுகள், முட்டை உற்பத்தி குறைந்தது.

சீராக அதிகரித்து வந்த உள்ளூர் முட்டை உற்பத்தி, 2021ல் நாட்டின் முட்டைத் தேவையில் 30.5 விழுக்காட்டை ஈடுசெய்தது. 2022ல் இந்த அளவு 28.9% ஆகக் குறைந்தது. 2022ல் கொள்முதலான காய்கறிகளில் 4 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளூர் பண்ணைகளில் இருந்து வந்தன. 2021ல் இது 4.3% ஆக இருந்தது. கடல் உணவைப் பொறுத்தவரை, உள்ளூர் உற்பத்தி 2022ல் 7.6 விழுக்காடாகக் குறைந்தது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று வெளியிட்ட அதன் உணவுப் புள்ளிவிவர ஆண்டறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் 2030க்குள் அதன் ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 உணவுப் பாதுகாப்பு இலக்கை அடைவதற்கான வேளாண் உணவுத் துறையின் திறனையும் அளவையும் வளர்ப்பதில் உறுதியாக இருப்பதாக அமைப்பு கூறியது.

லிம் சு காங்கை உயர் தொழில்நுட்ப வேளாண் உணவு மண்டலமாக மாற்றும் திட்டத்தையொட்டி, பரந்த அளவிலான உணவு உற்பத்தியை ஆதரிக்க அதிக நில ஒப்பந்தப்புள்ளிகள் அறிமுகப்படுத்தப்படும்.

குறைந்த தேவை, தங்கள் வணிகங்களை லாபகரமானதாக மாற்றுவதைக் கடினமாக்குவதாக உள்ளூர்ப் பண்ணைகள் கூறின. பொதுவாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைவிட அவை விலை அதிகம் என்பதால் பலர் உள்ளூர்ப் பொருள்களை வாங்கத் தயங்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்