பயணிகள் வருகையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு ஏற்ப சாங்கி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் குறைந்தது 220 அறைகளுடன் புதிய ஹோட்டல் ஒன்று 2027ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.
விமான நிலையத்தில் பொதுமக்களும் செல்லக்கூடியதாக அமைந்துள்ள மூன்றாவது ஹோட்டல் இது.
மீண்டும் புதிதாகத் திறந்துள்ள இரண்டாவது முனையத்தின் தெற்கே இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு மேலே இந்த ஹோட்டல் கட்டப்படும்.
சாங்கி விமான நிலையத்தில் பொதுமக்களும் செல்லக்கூடிய ஒரு ஹோட்டல், ஜுவலில் 130 அறைகளுடன் அமைந்துள்ள ‘யொட்டல்ஏர் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்’. இது 2019ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. மற்றொன்று மூன்றாவது முனையத்திற்குப் பக்கத்தில் 563 அறைகளுடன் அமைந்துள்ள ‘க்ரவுன் பிளாசா சாங்கி ஏர்போர்ட்’. இது 2008ஆம் ஆண்டுமுதல் இயங்கத் தொடங்கியது.
இவற்றைத் தவிர, வர்த்தக ரீதியான முக்கியத்துவம் பெற்ற பயணிகளுக்கென நான்கு ஹோட்டல்கள் T1, T2, T3 மற்றும் ‘ஜெட்கீ’ முனையங்களில் உள்ளன.
இந்நிலையில், இரண்டாவது முனையத்தில் புதிய ஹோட்டல் கட்டுவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் ஆகஸ்ட் மாதத்தில் ஏலக்குத்தகை கோரியிருந்தது.
ஒப்பந்தம் வரும் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப்பயணம் சார்ந்த சேவைகளை உருவாக்க, அரசாங்க அமைப்புகளுடன் சாங்கி விமான நிலையக் குழுமம் இணைந்து செயல்பட்டு வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகின்றது.
புதிதாகக் கட்டப்படும் ஹோட்டலுக்கும் தற்போது பொதுமக்களும் செல்லக்கூடியதாக இயங்கிவரும் இரு ஹோட்டல்களுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும் என்றும் புதிய வாடிக்கையாளர் பிரிவினருக்கு ஏற்ப அது அமைந்திருக்க வேண்டும் என்றும் ஏலக்குத்தகை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மூன்று முதல் நான்கு நட்சத்திர ஹோட்டல் தரத்துடன் சாங்கி விமான நிலையத்தின் உலகத் தரத்தை எதிரொலிக்கும் வகையிலும் புது ஹோட்டல் இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
விமான நிலையத்தில் கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கையின் 90 விழுக்காட்டை இந்த நவம்பரில் எட்ட முடிந்தது.
அத்துடன் ஐந்தாவது முனையத்துக்கான பணிகளையும் சிங்கப்பூர் மீண்டும் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது முனையம் நவம்பரில் முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதால் சாங்கி விமான நிலையம் ஆண்டுதோறும் ஒட்டுமொத்தமாக 90 மில்லியன் பயணிகளைக் கையாளும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.