மலேசியாவின் போர்ட் டிக்சனுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பிகளின் விநியோகத்தையும் விற்பனையையும் சிங்கப்பூர் கட்டுப்படுத்துகிறது.
போர்ட் டிக்சன் பகுதியில் கிடைக்கும் அந்தச் சிப்பிகளில் நச்சுக் கிருமிகள் உள்ளன என்பதையும், அவை உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதையும் மலேசிய மீன்பிடித் துறை உறுதிசெய்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) கூறியது.
ஏப்ரல் 2ஆம் தேதி எட்டு பேர் சிப்பிகளை உண்டு நோய்வாய்ப்பட்டதாக நம்பப்பட்ட சம்பவங்கள் குறித்து போர்ட் டிக்சனில் புகார் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலைவலி, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை, தசை வலுவிழப்பு போன்றவை ஏற்பட்டன.
இந்நிலையில், இறக்குமதியாளர்கள் எங்கிருந்து சிப்பிகளைக் கொண்டுவருகிறார்கள் என்பதை உறுதிசெய்ய, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சிப்பிகள் சீனா, மலேசியா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர் உணவு அமைப்பு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, விவசாயப் பகுதிகளில் தண்ணீரின் தரத்தைச் சோதிக்கும்.
அதோடு சிப்பிகள் போர்ட் டிக்சனிலிருந்து இறக்குமதி செய்யப்படாததை உறுதிசெய்ய, இறக்குமதியாளர்களுடன் அது இணைந்து பணியாற்றும்.
இதற்கிடையே, போர்ட் டிக்சன் பகுதியில் உள்ள அந்தச் சிப்பிகளில் பல்வேறு வகையான பாசிகளில் உள்ள நச்சுக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய மீன்பிடித் துறை நிர்வாகப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் வான் அஸ்னான் கூறினார்.
பாசிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு, அண்மைய வெப்ப வானிலை காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுவதாக அவர் சொன்னார்.