அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்ஸ்ஃபர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் ஆறு மாதங்களில் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குக் காரில் பயணம் செய்தனர். அந்தக் கார் அப்போது 16,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தது. பயணம் செய்தவர்களில் ஒருவரான திரு டிம் ஸ்லெஸ்ஸோர் 87 வயதில் அதே பயணத்தை எதிர்த்திசையில் மேற்கொள்ளவுள்ளார். அவர் சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு ஏழு பேர் கொண்ட ஒரு குழுவுடன் பயணம் செய்ய உள்ளார்.இந்தப் பயணத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் ஒன்று. திகில் நிறைந்த இந்தப் பயணம், சுற்றிப்பார்க்கும் மனப்பான்மைக்கு இலக்கணமாக இருப்பதாகக் கூறியது கழகம்.
சிங்கப்பூர் நிறுவப்பட்டு இருநூறு ஆண்டுகள் ஆனதை அனுசரிக்கும் வகையில் இந்தப் பயணம் இருப்பதாகவும் சிங்கப்பூருக்கும் பிரிட்டனுக்கும் உள்ள வலுவான வரலாற்றுத்தொடர்பை இது எடுத்துக்காட்டும் என்றும் அவர் கூறினார்.
1955க்கும் 1956க்கும் இடையே நீடித்த அப்போதைய பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாகத் திரு ஸ்லெஸ்ஸோர் தெரிவித்தார். “எனக்கு இப்போது 87 வயது. காலம் கடப்பதற்குள் நான் இதனைச் செய்து முடிக்கவேண்டும். உலகத்தில் இருக்கப்போவது ஒரே ஒரு முறை, அதனால் இதனைச் செய்யவேண்டும்,” என்கிறார் இந்த முதிய இளையர்.