வேண்டுமென்றே பாராமுகமாக இருப்பதன் தொடர்பிலான சட்டபூர்வ கோட்பாடுகளைப் பற்றி பல கோணங்களிலும் உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது. நைஜீரியாவைச் சேர்ந்த அடிலி சிபுக்கி இஜிக்கி என்ற ஆடவர் ஒருவர், மே 27ஆம் தேதி மரண தண்டனையிலிருந்து தப்பி விடுதலையானார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த ஆடவரின் பயணப்பெட்டியில் இருந்த 1.96 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அவருடைய பொறுப்பில்தான் இருந்தது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.
அந்த ஆடவர் 2011 நவம்பரில் சாங்கி விமான நிலையத்தில் கைதானார். அவருடைய பயணப் பெட்டியின் உள்ளே இரண்டு ஐஸ் போதைப்பொருள் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆடவரின் பால்ய நண்பர்கள், அதை சிங்கப்பூரில் யாரோ ஒருவரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். வேண்டுமென்றே பாராமுகமாக இருப்பதன் தொடர்பில் இதர பல கருத்துகளையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது என்பதை உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அத்தகைய கருத்துகளை மிகவும் கவனமாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். உரிய நேரத்தில் அரசாங்கத்தின் கருத்துகளை நாங்கள் வெளியிடுவோம். சட்டபூர்வ திருத்தங்கள் தேவையா என்பதையும் நாங்கள் தெரியப்படுத்துவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நைஜீரிய ஆடவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பார்க்கையில், சட்டத் திருத்தங்கள் பற்றி பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறதா என்று ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர் கேட்டதற்கு அளித்த பதிலில் திரு அம்ரின் இவ்வாறு பதில் கூறினார்.போதைப்பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட வேண்டுமானால் அவரிடமிருந்து போதைப்பொருள் பிடிபடவேண்டும். அதன் தன்மை யும் அந்தப் பொருள் தன்னிடம் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அனுமதி இல்லாமல் அந்தப் பொருளை அவர் சிங்கப்பூருக்கு கொண்டு வந்திருக்கவேண்டும் என்று திரு அம்ரின் விளக்கினார். நடைமுறையில் ஒருவரின் மன நிலையை மெய்ப்பிப்பது என்பது சிரமமானது என்பதால் இந்தச் சட்டம் அனுமானங்களை நாடுகிறது என்று அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
அப்படி குற்றம் சுமத்தப்படுபவர் அந்த அனுமானங்கள் தவறானவை என்பதை மெய்ப்பிக்க போதுமான சாட்சியங்களை அளிக்கவேண்டும் என்றும் திரு அம்ரின் குறிப்பிட்டார்.
நைஜீரியரின் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அவருடைய பெட்டியில் இருந்த போதைப் பொருளின் தன்மை பற்றி அவ ருக்கு தெரியும் என்ற அனுமானம் பொய் என அவரால் மெய்ப்பிக்க முடியுமா என்பதே முக்கிய அம் மாக இருந்தது.
அந்த நைஜீரியருக்கு உண் மையிலேயே போதைப்பொருள் இருந்தது பற்றி தெரியாது என்ற முடிவுக்கு குறுக்கு விசாரணை மூலமும் விவாதங்களின் மூலமும் அரசு தரப்பு வந்தது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.