மேல்தளத்தில் இருந்து வீசப்பட்ட கண்ணாடி போத்தல் முதியவர் ஒருவரின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஆண்ட்ரூ கோஸ்லிங் என்ற ஆடவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது, கண்மூடித்தனமான செயலால் மரணம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இம்மாதம் 18ஆம் தேதி திரு நசியாரி சுனீ, 73, என்ற விநியோக ஓட்டுநர், ஸ்பாட்டிஸ்உட் பார்க் சாலையில் உள்ள ‘ஸ்பாட்டிஸ்உட் 18’ எனும் தனியார் கூட்டுரிமைக் குடியிருப்பில் உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்காகச் சென்றிருந்தார்.
அங்குள்ள ‘பார்பக்யூ’ பகுதியில் உணவருந்த முற்பட்டபோது அவரது தலையைக் கண்ணாடி போத்தல் ஒன்று பதம்பார்த்தது. இதனால் நிலைகுலைந்த அவர் அப்படியே கீழே விழுந்தார். அவர் விழுவதற்குமுன் அங்கு திரண்டிருந்த தம் உறவினர்கள் ‘திடும்’ என பலத்த சத்தத்தைக் கேட்டனர் என்று சேவை மேலாளராகப் பணி யாற்றும் அவருடைய மூத்த மகள் நாஸ் சுரியாட்டி நசியாரி, 44, கூறினார்.
கீழே விழுந்து கிடந்த திரு நசியாரிக்கு அருகிலேயே ஒரு கண்ணாடி போத்தலையும் அவர்கள் கண்டனர்.
தாதியாகப் பணியாற்றும் உறவினர் ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தார். பின்னர் இரவு 8.35 மணியளவில் அவசர மருத்துவ வாகனம் மூலம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சையின்போது அவரது இதயம் மூன்று முறை துடிக்காது நின்றுவிட்டதாகவும் இன்னொரு முறை நின்றுவிட்டால் அவருக்குச் செயற்கைச் சுவாசம் அளிக்க வேண்டாம் எனக் குடும்பத்தினர் முடிவு செய்ததாகவும் திருவாட்டி சுரியாட்டி தெரிவித்தார். “வலி மேலும் நீடிக்க நாங்கள் விரும்பவில்லை,” என்றார் அவர்.
மறுநாள் காலையில் திரு நசியாரியின் ரத்த அழுத்தம் பெரிதும் சரிய, காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு நான்கு பிள்ளைகளும் ஒன்பது பேரப் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 20ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சம்பவத்திற்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலிஸ் இறங்கியது. மொத்தம் 35 தளங்களைக் கொண்டுள்ள அந்தக் கூட்டுரிமைக் குடியிருப்பில் வீடு வீடாகச் சென்று போலிஸ் விசாரித்தது. போலிஸ் அதிகாரிகள் இத்தாலிய ஒயின் போத்தலைக் காட்டி விசாரித்தனர் என்று அக்குடியிருப்பில் வசிப்பவர்கள் சொன்னதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி கூறியது. அத்துடன், ஒயின் அருந்துபவராக இருந்தால் கைரேகை மாதிரிகளை அளிக்கத் தயாரா என்றும் போலிசார் கேட்டதாக அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு மேல்மாடியில் இருந்து குப்பைகளை வீசிய 1,200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், அந்தப் பிரச்சினை நீடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகளும் பொருத்தப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கோஸ்லிங்கிற்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். வரும் செவ்வாய்க்கிழமையன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.