சிறப்பு வரவு செலவுத் திட்டம் தேவையில்லை என்று தெரிவித்த துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட், ஊழியரணியின் திறன் மேம்பாடு முக்கியம் எனக் கூறியுள்ளார். “தொழிலாளிகள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள நாங்கள் உதவி வருகிறோம். வேலைகளை மறுசீரமைக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம் - ஊழியர்கள் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதற்காக,” என்றார் அவர். இந்நாட்டுப் பொருளியலின் நிலைமை அடுத்த ஆண்டு இறுதிக்குள் எப்படி இருக்கும் என்பதை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிப்பதாகத் திரு ஹெங் கூறினார். தேவைப்படும்போது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக நிற்கிறது என்றும் அவர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) ‘சிஎன்ஏ938’ வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் 8 விழுக்காடு குறைந்திருப்பது குறித்து திரு ஹெங் இவ்வாறு கூறினார். மின்னணுவியல் மற்றும் துல்லியப் பொறியியல் உற்பத்திகளில் ஏற்பட்ட சரிவு, ஒட்டுமொத்த உற்பத்தி அளவை வெகுவாகப் பாதித்துள்ளது.அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றம் நிலவி வரும் வேளையில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் எதிர்நோக்கும் அபாயம் அதிகரித்தாலும், ஒருசில துறைகளின் நிலைமை நல்லவிதமாக இருப்பதாகத் திரு ஹெங் கூறினார். உதாரணமாக, நிதித்துறையும் காப்புறுதித் துறையும் நன்றாக இருப்பதைத் திரு ஹெங் சுட்டினார். அத்துடன் மின்னணுவியல் துறையிலேயே தரவு சேமிப்பகம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அனைத்துலக பண நிதியம் உலக வளர்ச்சி விகித முன்னுரைப்பைப் பலமுறை குறைத்தபோதிலும், பொருளியல் சுழலைச் சமாளிக்கக்கூடிய பல்வேறு உபாயங்களை சிங்கப்பூர் அரசாங்கம் தனது கைவசம் கொண்டிருப்பதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார். சிங்கப்பூருக்கு ஏற்ற நாணய மாற்றும் விகிதம் என்ன என்பதன் தொடர்பில் சிங்கப்பூர் நாணய ஆணையம் கவனமாக ஆராய்வதாகவும், நிதியியல் கொள்கைகள் தொடர்பான வழக்கமான அறிவிப்பில் ஆணையம் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.