‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்று குறித்து பொதுமக்களின் தனிப்பட்ட, சமூக பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசாங்கம் நான்கு தேசிய மொழிகளிலும் அறிவிப்பு காணொளிகளை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழிக்கான காணொளியில் திரு ஆனந்த கண்ணன் இடம்பெற்று அசத்தினார். அவர் இடம்பெற்ற காணொளியிருந்து முக்கிய குறிப்புகள்:
1. நல்ல தனிப்பட்ட சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்கவேண்டும். சவர்க்காரம், தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது அவசியம். அது முடியாத பட்சத்தில் கைகளை கிருமிநாசிணி கொண்டு சுத்தம் செய்யலாம்.
2. உடல்நலக் கண்காணிப்பு: ஒரு நாளுக்கு இரண்டு முறைகள் உடல் வெப்பநிலையை சோதித்துப் பார்க்கவேண்டும்.
3. முகத்தையும் கண்களையும் கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும்.
4. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்துகொள்ளவேண்டும்.
5. கை கொடுக்க தேவையில்லை, இந்திய மரபுப்படி கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லலாம்.
6. தும்மல், இருமல் வந்தால் ‘டிஷு' பேப்பர்’ வைத்து முகத்தை மூடிக்கொள்வது கிருமி பரவலைத் தடுக்கும்.
7. உடல்நிலை சரியில்லை என்றால் கூட்டமான இடங்களைத் தவிர்க்கவும், முகக்கவசங்களை அணியவும், மருத்துவரைப் பார்த்து வீட்டிலேயே இருப்பது சிறந்தது.
8. வீட்டு தடைகாப்பு ஆணை அல்லது விடுப்பு விதிக்கப்பட்டால் குறிப்பிடப்பட்ட இடத்தில் இருக்கவும், இது உங்கள் கடமை.