பேருந்து சேவை 972இன் ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று (ஏப்ரல் 2) தெரிவித்தது.
அந்த ஓட்டுநர் கடைசியாக மார்ச் 27ஆம் தேதி அன்று பணியில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 28ஆம் தேதி அவரது ஓய்வு நாள்.
மார்ச் 31ஆம் தேதி அன்று அவர் மருத்துவரைச் சந்தித்தபோது அவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று எஸ்எம்ஆர்டி கூறியது.
“அவர் மார்ச் 29ஆம் தேதி அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், அன்று மருத்துவரைப் பார்த்தார். அவர் மார்ச் 31ஆம் தேதி அன்று மீண்டும் அந்த மருத்துவரை பார்த்தபோது அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அது மேலும் கூறியது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அந்த ஓட்டுநரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
“அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் உதவி வழங்குகிறோம்,” என்று எஸ்.எம்.ஆர்.டி கூறியது.
அவருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார அமைச்சு நிறுவனம் உதவுகிறது. அத்துடன் ஓட்டுநர் பயன்படுத்திய வாகனமும் வளாகமும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டது.
“பயணிகள், ஊழியர்களின் உடல்நலனுக்கும் நல்வாழ்வுக்கும் நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. பயணிகள், ஊழியர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பயணிகளுக்கு உறுதியளிக்கிறோம்,” என்று எஸ்எம்ஆர்டி சாலைப் போக்குவரத்துப் பிரிவின் தலைவர் டான் கியன் ஹியோங் கூறினார்.
எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்ஸிட் ஆகியவை கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்கள், வளாகங்கள் போன்ற பகுதிகளில் பயணிகள் அதிகம் தொடும் பகுதிகளைச் சுத்தம் செய்வதை அதிகரித்துள்ளன.