சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வேளையில், இங்கு சட்டவிரோதமாக கார் பகிர்வுச் சேவைகளை வழங்கியதாக இரு ஓட்டுநர்களின் கார்களை அண்மையில் நிலப் போக்குவரத்து ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதையடுத்து, இங்கு கார் பகிர்வுச் சேவையை வழங்கும் ஆகப் பெரிய தளம் ஒன்று இன்னும் செயல்படுவதாகத் தெரிகிறது.
‘டெலிகிராம்’ செயலில் ‘எஸ்ஜி ஹிச்’ எனப்படும் உரையாடல் குழு இன்னும் செயல்படுவதாக தி நியூ பேப்பர் நாளிதழ் கண்டறிந்தது. எனினும், அதில் வெகுக் குறைவான எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் பதிவிடுவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழிடம் பேசிய பயனீட்டாளர் ஒருவர், தாம் செல்லும் இடத்திற்குத் தம்மை அழைத்துச் செல்ல ஓட்டுநர் யாராவது உள்ளாரா என நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் தாம் ‘எஸ்ஜி ஹிச்’ உரையாடல் குழுவில் கோரிக்கை விடுத்ததாகச் சொன்னார். அதற்கு 20 நிமிடங்களில் ஏழு ஓட்டுநர்களிடமிருந்து அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த உரையாடல் குழுவிற்குத் தடை விதிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொவிட்-19 கிருமிப் பரவிவரும் இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளி நடைமுறைகளுக்கு இந்த ஏற்பாடு பங்கம் விளைவிப்பதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ‘எஸ்ஜி ஹிச்’ உரையாடல் குழுவை நிர்வகிக்கும் ‘சிங்கப்பூர் டெலிகிராம் நெட்வொர்க்’ கட்டமைப்பை தி நியூ பேப்பர் தொடர்புகொண்டு விசாரித்தது.
சம்பந்தப்பட்ட அந்த உரையாடல் குழு, கலந்துறவாடல் நோக்கங்களுக்காக மட்டுமே இயங்குவதாக அக்கட்டமைப்பை நிர்வகிப்பவர்கள் விளக்கமளித்தனர். குழு உறுப்பினர்களின் சட்டவிரோதச் செயல்களுக்காக அக்குழுவை நிர்வகிப்பவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் எனக் கூறும் குறிப்பு ஒன்றும் அந்த உரையாடல் குழுவில் இடம்பெற்றுள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதி கார் பகிர்வுச் சேவை சட்டவிரோதமாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.