கொரோனா கிருமித்தொற்றிலிருந்து அதன் டாக்சி ஓட்டுநர்களைப் பாதுகாக்க கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை முன்னோட்டும் பார்த்து வருகிறது. 400 கம்ஃபர்ட்டெல்குரோ
டாக்சிகளில் ஓட்டுநர் அமர்ந்திருக்கும் இருக்கையைச் சுற்றி பிளாஸ்டிக் கேடயம் பொருத்தப்பட இருக்கிறது. இந்தப் பிளாஸ்டிக் கேடயம் டாக்சி ஓட்டுநர்களைப் பயணிகளிடமிருந்து பிரிக்கிறது.
மொத்தமான, ஒளி ஊடுருவி தெளிவாகப் பார்க்கக்கூடிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இந்தக் கேடயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மீட்டர் நீளம், 0.7 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் மொத்தம் கொண்ட இந்த பிளாஸ்டிக் கேடயங்கள் டாக்சி ஓட்டுநரின் இருக்கை முழுவதையும் சுற்றி பொருத்தப்படுகிறது. அதில் இரண்டு திறப்புகள் உள்ளன.
பயணிகள் கட்டணம் செலுத்த இந்த திறப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழிக்க முடியாத பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இந்தக் கேடயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் பயணிகளிடமிருந்தும் டாக்சி ஓட்டுநர்களைப் பாதுகாக்க இந்தக் கேடயங்கள் உதவும்.
இந்தக் கேடயம் டாக்சி ஓட்டுநரின் இருக்கையை மட்டும் சுற்றியிருக்கும். டாக்சியின் மற்ற பகுதிகளில் காற்றோட்டத்தை அது பாதிக்காது. இந்தப் புதிய ஏற்பாடுக்கு டாக்சி ஓட்டுநர்கள், பயணிகள் ஆகியோர் என்ன கருத்து தெரிவிக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள இருப்பதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்தது. கடந்த ஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் முதல்முறையாக கொரோனா கிருமித்தொற்று தலைதூக்கியபோது முதலில் பாதிக்கப்பட்டோரில் டாக்சி ஓட்டுநர்களும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் அடங்குவர்.
நேற்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 50 டாக்சிகளில் இந்த பிளாஸ்டிக் கேடயங்கள் பொருத்தப்படும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் கூறியது.
இந்த பிளாஸ்டிக் கேடயங்களுக்கு வி-ஷீல்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவை உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.