டிஎஸ்ஓ நேஷனல் லேபரட்டரீஸ் (DSO National Laboratories) நிறுவனமும் ஏ*ஸ்டார் (A*Star) அமைப்பும் உருவாக்கி இருக்கும் புதிய கொவிட்-19 சாதனம், பரிசோதனை நேரத்தைப் பாதியாகக் குறைக்கிறது. ‘ரெசலூட் கொவிட்-19’ (The Resolute Covid-19) என்ற அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி பரிசோதனை நடத்தினால் சுமார் 1.5 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரிசோதனைக்கு சுமார் நான்கு மணி நேரம் பிடிக்கும். கொரோனா கிருமி தலைவிரித்து ஆடும் இந்தக் காலகட்டத்தில் பல மூலப் பொருட்கள் கிடைப்பது பெரும் சிரமமாகி இருக்கிறது. இந்தச் சூழலில் அறிவியல் அறிஞர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ரெசலூட் கொவிட்-19 சாதனம் குறைந்த அளவிலான மூலப் பொருட்களையே பயன்படுத்தும் என்றும் இன்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனையைப் போல் அல்லாமல் இந்தச் சாதனம், நோயாளியிடம் இருந்து பெறப்படும் மாதிரியைப் பதப்படுத்த குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்ளும். புதிய கருவியை சாதாரண பரிசோதனைக் கூடத்தில் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பர்களுக்கு அதிக தொழில்நுட்பங்கள் தெரியவேண்டிய தேவை இராது. அதோடு, இந்தப் புதிய கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை நடத்துவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனை பிசிஆர் சோதனை என்று குறிப்பிடப்படும்.
நோயாளியின் உள் மூக்கில் இருந்து அல்லது உள் வாயில் இருந்து எடுக்கப்படும் திரவ மாதிரியில் உயிர்க் கிருமி இருக்கிறதா என்பது இந்தச் சோதனை மூலம் தெரியவரும். இதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.
என்றாலும் இந்தச் சோதனையை நடத்துவதற்கு முன்னதாக, நோயாளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியைப் பதப்படுத்த வேண்டும்.
இதற்குச் சுமார் 3 மணி நேரம் பிடிக்கும். பிறகுதான் மாதிரியை கிருமிப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். ஆனால் புதிய ரெசலூட் கருவி நோயாளியிடம் இருந்து பெறப்படும் மாதிரியை, ஏற்கெனவே பதப்படுத்தப்பட்ட திரவத்தில் சேர்த்து அதன் மூலம் பதப்படுத்தும் நேரத்தைப் குறைத்துவிடும்.
பிறகு அதை பரிசோதனைக் கருவி சோதிக்கும். இவை எல்லாம் 60 நமிடங்கள் முதல் 90 நிமிடங்களில் முடிந்துவிடும்.
புதிய சாதனம் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துகிறது என்று டிஎஸ்ஓ சோதனைக்கூட சரிபார்ப்புப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி இங் சோக் ஹுன் தெரிவித்தார். சுகாதார அறிவியல் ஆணையம் ஏப்ரல் மாதம் ரெசலூட் சாதனத்திற்குத் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கியது.