கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய பயணிகளுக்கு திருப்தி கூடியதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) இணையம்வழி நடத்திய அந்த ஆய்வில் ஏறத்தாழ 7,500 பேர் பங்கேற்றனர். இவ்வாண்டு மே, ஜூலை மாதங்களுக்கு இடையில் பயணிகளிடையே திருப்தி கணிசமான அளவு அதிகரித்ததை ஆய்வு காட்டியது.
கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் எம்ஆர்டி கட்டமைப்பு 66.1 புள்ளிகளைப் பெற்றது. ஆனால் இவ்வாண்டு அது 73.4 புள்ளிகளைப் பெற்றது.
இவ்வாண்டு மே முதல் ஜூலை வரை பொதுப் பேருந்துகளில் பயணிகளின் திருப்தி 74.4 விழுக்காடாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 68.9 விழுக்காடாக இருந்தது.
என்றாலும், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்த பிறகு ஜூன், ஜூலையில் பதிவான புள்ளிகள் கடந்த ஆண்டு பதிவான நிலைக்குத் திரும்பின.
ஆய்வு முடிவுகளை நேற்று வெளியிட்ட எஸ்எம்யு உன்னத சேவைக் கழகத்தின் ஆய்வு, ஆலோசனைப் பிரிவுத் தலைவர் சென் யோங் சாங், தற்போது கூடுதலானோர் வேலைக்குத் திரும்பும் நிலையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளதாகச் சொன்னார்.
“ரயில்கள், பேருந்துகளை அடிக்கடி சேவைக்கு விடும்படி சிலர் கோருகின்றனர். அதுபோக, பொதுப் போக்குவரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.